Wednesday, September 30, 2009

நயன்தாராவுக்கு ஆதரவுக்குரல்


சில நாட்களாக எந்த செய்தி இணையத்தைத் திறந்தாலும் நயன்தாரா - பிரபுதேவா காதல், திருமணம் தொடர்பான செய்திகளே முதலிடத்தை பிடித்திருந்தன. இதில் எனக்கு என்ன பிரச்சினை என்று நினைக்கலாம். சத்தியமா ஒண்ணுமேயில்லை. காதல், கலியாணம் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். இன்னொருத்தியைக் காதலிப்பது என்பது குடும்ப பிரச்சினை. இதில நாங்க மண்டையை உடைக்க ஒண்ணுமேயில்லை. ஆனால் இவர்களது காதல் பிரச்சினையில் மாதர்சங்கங்கள் நயன் படங்கள் திரையிடப்படும் தியேட்டர்களில் முற்றுகைப் போராட்டம் செய்யப்போவதாக வந்த செய்தியில் தான் எனக்கு நிறைய கேள்விகள் (உட்கார்ந்து யோசிக்கவுமில்லை, ரூம் போட்டு யோசிக்கவுமில்லை) அதுவா வருது.

ஏதோ தேசிய பிரச்சினை போல இச்செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் நானும் அதுபற்றி பெரிய ஆய்வு செய்ய வந்திருக்கிறேன் என்று நினைத்தால் தயவு செய்து மன்னித்து விடுங்கள். அது எப்படியான காதலாக இருந்துவிட்டுப்போகட்டும். என்னுடைய நோக்கம் எல்லாம் இதனூடாக மாதர்சங்கங்களின் சில செயற்பாடுகளை விளங்கிக்கொள்வதுதான்.

பெண்கள் மேம்பாட்டிற்காகப் பெண்களால் அமைக்கப்பட்ட தன்னார்வ அமைப்புக்கள்தான் மாதர்சங்கங்கள். ஒரு பெண்ணுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது என்பதற்காக குரல் கொடுக்க பெண்கள் முன்வந்துள்ளது நல்ல விடயம், வரவேற்கப்பட வேண்டியது. ஆனால் தியேட்டர் வரை வந்துள்ள அவர்களின் போராட்ட வடிவம்தான் ஒரு தப்பான உதாரணத்திற்கு முன்னோடியாகப் போகின்றதோ என்ற ஐயம் எழுகின்றது.

இருவர்மீதும் சொல்லப்படும் செய்திக்கு, ஏன் நயன்தாராவை மட்டும் குற்றம் சொல்ல வேண்டும். ஒருவருக்கு மட்டும் ஏன் தண்டனை. பிரபுதேவாவும்; ஒரு நடிகர்தானே! அவரது படங்களைத் தடை செய்ய போராட முடியாதா? அல்லது அவருக்கெதிராக போராட்டம் செய்ய முடியாதா? இதன் மூலம், ஒரு ஆண் குற்றம் செய்யலாம், பெண்ணுக்கு மட்டும்தான் வரைமுறைகள் என்று! மாதருக்காக குரல் கொடுக்கும் இந்த மாதர்சங்கங்கள் சொல்லுகின்றனவா?? அப்படி வரையறுக்க முடியுமா! இது ஒரு அநீதிக்கெதிரான போராட்டம் என்றால். மீண்டும் அவ்வாறான ஒரு தப்பு நடக்கக் கூடாது என்பதற்கு முன்னுதாரணமாக அமையவேண்டாமா? இதற்கு பெண்ணியம், பெண்நவீனத்துவம் பற்றி பேசும் மாதர்சங்கங்கள் என்ன சொல்லப்போகின்றன?

ஏதோ வீட்டில் அடக்கமாக, அப்பாவியாகவிருந்த பிரபுதேவாவை, நயன்தாரா சொக்குப்பொடி போட்டு வைத்திருப்பது போலவும், வாயில விரலை வைச்சா கடிக்கத்தெரியாத அப்பாவியை விடுவிக்க போராடுவது போலவும் இருக்கிறது இவர்களது போராட்டம். ஒரு பெண்ணின் வாழ்க்கை பற்றிப் பெண்தான் சிந்திக்க வேண்டும் என்றால், மனைவி மீது அந்த மனிதருக்கு இல்லாத அக்கறை, எங்கோ இருக்கும் ஒரு பெண்ணுக்கு ஏன் வரவேண்டும்?? ஒரு பெண்ணின் வாழ்க்கை தன்னால் சீரழிக்கப்படுகின்றது என ஒரு பெண் சிந்திக்க வேண்டும் என்பதுபோல, தன்னால் இரண்டு பெண்களின் வாழ்வு சீரழிக்கப்படுகின்றது என்பதை ஏன் அந்த ஆண் சிந்திக்கக் கூடாது?. மாதர்சங்கங்களின் அடிப்படைக் கோட்பாடுதான் என்ன? நயன்தாராவை மட்டும் குற்றம் சொல்லி, உங்கள் போராட்டம் வெற்றி பெற்று குடும்பத்தை இணைத்து வைத்த பின்னா, மீண்டும் ஒரு பெண்ணுடன் போக மாட்டார் என்று என்ன நிச்சயம்? அவள் ஒரு சாதாரண பெண்ணாக இருந்தால், இதே போன்று போராட்டம் செய்வார்களா? நாணயத்தின் இரண்டு பக்கங்களை போல எந்தப் பிரச்சினையும் பார்க்கப்பட வேண்டும் என்பது எனது விருப்பம். ஒரேயொரு ஆதங்கம்தான் ஏன் இவர்களில் யாரும் பிரபுதேவாவை தப்பு செய்தவராகப் பார்க்கவில்லை?

காலம் காலமாக எமது காலச்சாரம் ஆண்மகனைத்தான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. சிலப்பதிகார காப்பியத்தில் மாதவி ஒதுக்கப்பட்டாளே தவிர, அவளைத் தேடிச்சென்ற கோவலன் அல்ல. நடக்கமுடியாத கணவனை விபச்சாரி வீட்டிற்கு சுமந்து சென்று விடுபவள் தான் கற்புக்கரசி என்பதும் எமது இலக்கியங்களில் கற்பிக்கப்பட்ட அற்புதம் (அசிங்கம்). அதே போல் சிவன் தொடங்கி முருகன், கிருஷ்ணர் வரை எந்தக் கடவுள்தான், ஒரு பெண்ணுடன் வாழவேண்டும் என்பதை கற்பித்துக் காட்டியிருக்கின்றது? எல்லோரும் வள்ளி திருமணத்தை கோயில்களில் விமர்சையாக கொண்டாடுகின்றோம், அதன் கருப்பொருள் பற்றிய விளக்கம் தெரியாததா என்ன! ஏன் அந்த மண்ணின் மாண்புமிகு முதல்வரே கால்மாட்டில் மனைவியும் தலைமாட்டில் துணைவியுமாகத்தானே காட்சி தருகிறார். (இப்பவே கண்ணைக்கட்டுதே! என்று அயர்ந்து விடாதீர்கள்)

மாதர்சங்கங்களின் கருத்துப்படி தமிழகத்தில் இதுவரை எந்தப்பெண்ணுக்கும் இப்படி ஒரு பிரச்சினை வந்ததேயில்லை. முதன்முறையாக ஒரு பெண்ணுக்குப் பிரச்சினை என்பது போல களத்தில் இறங்கியுள்ளன. கிராமத்தில் எண்பது சதவீதமான பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. நான் சந்தித்த பெண்களில் பலர், 'மனசில புதைச்சு வைச்சிருக்கிறோமய்யா, என்ன செய்வது பலபேரு இதனால வாழக்கையே இழந்திட்டாங்க, இருந்தாலும் கடைசிகாலத்தில நம்மகிட்டதான் வருவாக' என்று பதிலளிக்கிறார்கள். மாதர்சங்கங்கள் பலமாகத்தானே இருக்கின்றன ஏதாவது செய்யலாமில்லையா? என்று கேட்டால், 'ஆம்பளை என்றால் அப்பிடித்தான் கொஞ்சம் அனுசரித்துப் போ' என்று ஆலோசனைதான் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த இடத்தில் வராத அக்கறை, ஏன் இதில் மட்டும்?

தவறான வழிநடத்தல்களிலும், பிழையான கோட்பாடுகளிலும் சில மாதர்சங்கங்கள் எவ்வாறு இயக்கப்படுகின்றன என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணம். தமிழ்நாட்டில்; மாதர்சங்கம் என்பது ஒரு பலம் வாய்ந்த அமைப்பு, நியாயமான வழிநடத்தல் நிச்சயமாக 'பெண் மேம்பாடு' என்ற இலக்கை அடைய வைக்கும் அவர்கள் அரசியலுக்கும், அதிகாரத்துக்கும், பணத்திற்கும், புகழ்ச்சிக்கும் விலைபோகாத சந்தர்ப்பத்தில்.

இந்தப் பதிவை செய்துகொண்டிருக்கும் போது இன்றைய தினத்தந்தியில் 'கன்னியாகுமாரி பெண்ணைப் போல சென்னையிலும் இளம்பெண் கணவரின் மறுமணத்திற்கு எதிராக அவரது வீட்டின் முன்னால் பெற்றோருடன் போராட்டத்தில் குதித்தார்' என்ற செய்தி என்னைப்பார்த்து, நயனுக்கெதிராக என்றால் மட்டுமா! எனக் கேட்டது.

கொசுறு:

எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர் பிரபுதேவா, எனக்குப் பிடிக்காத நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. என்றாலும் அவரின் இடையழகு படுசூப்பர்......! ம்..................ம் ஓவரா வழிஞ்சிட்டனோ!

24 comments:

முல்லைப்பிளவான் said...

தங்களுக்கு ஏற்றட்ட குழப்பம் ஒன்றும் புதிய குழப்பம் இல்லை என நினைக்கிறேன். என்று பெரும்பாலன அமைப்புகளும் சங்கங்களும் ஆட்சிபீடங்களில் உள்ளவர்களின் நன்மைக்காகவும் பணம் சம்பாதிப்பதற்காகவும் தான் உருவாக்கப்பட்டு இயங்குகின்றன் . பெரும்பாலான சங்கங்கள் தமது சுய புத்தியிலோ அல்லாது தமது சங்க அங்கத்தவர்களின் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் இயங்குவதில்லை. எல்லாம் என்ன உள்நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டனவோ அதன் படிதான் இயங்கும் என்பதுதான் உண்மை இது இங்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள உண்மை.ஐ.நா சபை தொடக்கம் அடிமட்ட கிராம சங்கங்கள் வரை இதான் நிலமை. தேவையில்லாமல் நீங்கள் ரும் போட்டு யோசிக்க வேண்டாம். வேண்டுமானால் இதற்கு எதிராக நீங்களும் ஒரு சங்கத்தினை உள்நோக்கத்துடன் ஆரம்பியுங்கள்.

rapp said...

super:):):)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

எங்கள் ஆ.தரவு எப்போதும் உண்டு!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இது ஒரு வகையான பெண்ணிய மாயை!

வால்பையன் said...

ம்ம்

குறும்பு குண்டன் said...

வணக்கம் முல்லைப்பிளவான்

சங்கங்கள் தொடர்பில் கருத்துக்களால் வலுச்சேர்த்திருப்பதற்கு நன்றி.

சங்கம் தொடங்கலாம் என்று கூறினீர்கள் இருக்கிற சங்கங்கள் போதாதா !

இதுவேறயா!..... விடுங்கசாமி

Admin said...

உங்கள் கருத்துக்கள் நியாயமானதே.

குறும்பு குண்டன் said...

நன்றி சந்ரு,நாமக்கல் சிபி,வால்ப்பையன், ரப்
எல்லோருக்கும்

Anonymous said...

நியாயமான வாதங்களை முன்வைத்திருக்கின்றீர்கள், தங்களின் தர்க்க ரீதியான பார்வை புலமைசார் திறனை வெளிப்படுத்தி நிற்கின்றது ஆனால் கொசுறில் நயனின் இடுப்பில் தொங்கி நியாயங்களிலும் வழிஞ்சிட்டீங்களா என எண்ணத்தோன்றுகிறது.

ஒரு சிறு சந்தேகம், நமது கலாச்சாரத்தைப் புரட்டிக் காட்டுவதன் மூலம் ஆணின் பல திருமணம் என்பது சாதாரணமானது அதை இயல்பாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்கிறீர்களா?

வால்பையன் said...

//நமது கலாச்சாரத்தைப் புரட்டிக் காட்டுவதன் மூலம் ஆணின் பல திருமணம் என்பது சாதாரணமானது அதை இயல்பாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்கிறீர்களா?//

நயன் ஏற்கனவே சிம்புவை காதலித்தது பிரபுதேவாவுக்கு தெரியும்! அதனால் இது நயனுக்கே இரண்டாவது திருமணம் தான்!
ஆகையால் பெண் விரும்பினால் இரண்டாவதென்ன ஆணை போலவே அவளும் கட்டிக்கலாம்!

கிடுகுவேலி said...

//...நடக்கமுடியாத கணவனை விபச்சாரி வீட்டிற்கு சுமந்து சென்று விடுபவள் தான் கற்புக்கரசி என்பதும் எமது இலக்கியங்களில் கற்பிக்கப்பட்ட அற்புதம் (அசிங்கம்). ..//

முகத்தில் அடிக்கும் வரிகள். எமது சமூகத்தில் நிறைய மாற்றங்கள் வேண்டும். பல இடங்களில் சமூகம் ஆண்களைத்தான் காப்பாற்றுகிறது. ஆனால் சில இடங்களில் பெண்களை காப்பாற்றுகிறது ஆண்கள் குற்றம் செய்யாதவிடத்தும். உதாரணமாக, பெண்கள் இப்போது வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்துகிறார் என்று ஒரு முறைப்பாட்டை கொடுத்தால் அது ஆண்களில் பிழை என்றே எதுவித சான்றும் இன்றி முடித்துவிடுகிறார்கள். ஆகவே பெண் விடுதலை என்று பேசி அது ஓவரா போகுதோ என்றும் தோன்றுகிறது. ஆனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சில சமத்துவ உரிமைகள் கிடைக்கத்தான் வேண்டும்.

குறும்பு குண்டன் said...

அன்பரே
கருத்துகளிற்கு நன்றி

கொசிறில் நயன் இடுப்பை குறிப்பிட்டது வர்ணனை
நகைச்சுவைக்கானது

//நமது கலாச்சாரத்தைப் புரட்டிக் காட்டுவதன் மூலம் ஆணின் பல திருமணம் என்பது சாதாரணமானது அதை இயல்பாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்கிறீர்களா?//

சங்க இலக்கியங்கள் தொட்டு தற்போது வரையுள்ளதை சுட்டிக்காட்டினேன். காரணம் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களிலெல்லாம் பெண்கள் மட்டும் குற்றவாளிகளாக்கப்படுவது தவறு என்பதை சுட்டிக்காட்டவே, தவிர அதற்கு ஆதரவான கருத்தாக இதைப்பதிவு செய்யவில்லை

சமூகத்தில் பெண்கள்மீதான சில அநீதிகளை வெளிப்படுத்த விரும்பியதால்
சில சிக்கலான விடயங்களையும் விவாதத்திற்கெடுத்தேன்.

நண்பர் அத்திவெட்டி பாரதி நறுக்கான வரிகளில் நல்லதொரு கருத்தை தெரிவித்திருக்கின்றார்
அவருக்கும் புதிதாக வந்து கருத்துக்களைத் தந்தவர்களுக்கும் நன்றி

உங்கள் நல்லாதரவுகளுக்கு நன்றி

ரங்குடு said...

இதோ ரங் குடு நாட்டாமையின் தீர்ப்பு:

பிரபுதேவா யாரை வேண்டுமானாலும் கல்யாணம் செய்து கொள்ளட்டும்.

1. அவரது தற்போதைய மனைவிக்கு
பிரபு தேவாவின் சொத்துக் க ளில் 50% பிரித்து க்ககடுக்க வேண்டும்.

2. திருமணமான பிறகு பிரபு தேவா + நயன் தாராவின் வரும்படியில் 50% முன்னாள் மனைவிக்குக் கொடுக்க வேண்டும்.

Uthamaputhra Purushotham said...

தவறான தீர்ப்பு. பிரபு தேவா வேறு யாரையோ திருமணம் செய்து கொண்டால் நயன் தாரா ஏன் தன் வருவாயில் 50% தரவேண்டும்?

புதிய திருமணமும் கசந்து பிரபுதேவா இன்னொரு புதிய திருமணம் செய்து கொண்டால் வருமானங்களை எப்படிப் பிரிப்பது?

தீர்ப்பின் நோக்கம் புரிகிறது. ஆனால் இன்னும் தெளிவு தேவை.

குறும்பு குண்டன் said...

நாட்டாமைகளே தீர்ப்பை மாத்துங்கப்பா........!


இச்சம்பவத்தினூடாக சொல்ல வந்தது

பல பெண்கள் மறுமணத்திற்கெதிராக தனித்து போராடுகிறார்கள் அவர்களுக்கும் குரல் கொடுக்கலாமே!

பிரச்சனை ஏற்படும் போது பெண்களை மட்டுமே குற்றஞ்சாட்டுகின்றனர். அப்படியாயின் ஆண் தப்பு பண்ணினாலும் தவறில்லை அல்லது பெரிசுபடுத்த தேவையில்லை என்றா இந்த நவீன பெண்ணியவாதிகள் சொல்கின்றனர்.

அத்திவெட்டி பாரதி சொன்னது போல பெண்ணிய மாயையிலிருந்து விடுபடுவார்களா?

நாட்டாமைகளே இதுக்கு தீர்ப்பை சொல்லுங்கப்பா......!

இருவரது கருத்திற்கும் வருகைக்கும் நன்றி

குறும்பு குண்டன் said...

ஆக்கங்களிற்கு பல இடங்களில் கதியாலாக நின்று கருத்துச்சொல்லும் கதியால் அவர்களே!

தங்களுடைய கருத்துக்கள் நியாயமானதே, நடைமுறையில் இப்படி பல சம்பவங்கள் நடந்தேறிக்கொண்டுதான் இருக்கின்றன.
என்றாலும்

திருமணபந்தத்தில்
பெண், ஆணை நோக்கி நம்பிக்கையுடன் அன்புக்கரங்களை நீட்டுகிறாள். ஆண், அதே நம்பிக்கையுடனும் அன்புடனும் பற்றும் போதுதான் குடும்பத்தில் பிணைப்பும், ஆண், பெண் சமத்துவமும் பெண்விடுதலையும் சாத்தியமாகும்.

கருத்துகளிற்கு நன்றி

பின்னோக்கி said...

உங்களுக்கு பெண்ணுரிமை / பெண்ணின கொடுமை பற்றி எழுத வசமா ஒரு டாபிக் கிடைச்சுருக்கு என்சாய்.

அப்படியே அசோக்நகர்ல நடந்த 2 கொலை பத்தியும் எழுதுங்க. அந்த கொலையில் உயிரிழந்த அப்பாவி சிறுவனைப் பத்தி மாதர் சங்கங்கள் போராட்டம் நடத்த மாட்டேங்குதே ?? ஓ..இறந்து போனது பையன் இல்லை. ஒரு பொண்ணுன்னா போராடலாம்.

ஒரு வேளை அந்த மாதிரி நியூஸ் நீங்க படிக்குற பேப்பர்ல வரமாட்டேங்குதோ என்னமோ.

பிரபுதேவா மேல இந்த மேட்டர்ல எவ்வளவு தப்பு இருக்குன்னு எழுதுற பத்திரிக்கையையும் படிங்க.

அப்புறம் வருசத்துக்கு 10 லட்சம் மேல வாங்குற சாப்டுவேர் பெண்மணிகளுக்கு இன்கம்டேக்ஸ்ல கூடுதலா வரிவிலக்கு அளிக்குறாங்களே ?? ஆணும் பெண்ணும் சரிசமமா நடத்தப்படனும்னு குரல் கொடுக்குறவங்க இதப் பத்தி ஒன்னும் சொல்ல மாட்டேங்குறாங்க ? நீங்களும் அதப் பத்தி எந்த பதிவும் போட மாட்டேங்குறீங்களே ??.

நிறைய பேர் எழுதிருக்குற மாதிரி இது சூப்பர் பதிவுன்னு பாராட்டுறேன், நீங்க அந்த இன்கம் டேக்ஸ் மேட்டர பத்தி எழுதுனா ?.

இந்த பதிவுக்கும் நான் சொன்னதுக்கும் சம்மந்தமில்லைன்னு உடனே நிறைய பேர் பின்னூட்டத்துக்கு பின்னூட்டமிடப்போகிறார்கள்னு தெரியும். ஆனா..அந்த இன்கம்டேக்ஸ் பத்தி எழுத ஒருத்தனும் ரெடியா இல்லை.
தன்மானம், சுய மரியாதை பொண்ணுரிமைன்னு பேசும்போது, தேவையில்லாம, ஓட்டுக்காக அரசியல்வாதிங்க குடுத்த இந்த கேடுகெட்ட சலுகைகளையும், எங்களுக்கு வேண்டாம்னு சொல்லக் கூடிய ஒரு பெண்மணி இந்த நாட்டுல இல்லையேன்னு நினைக்கும் போது வருத்தமா இருக்கு. ஒன்னு நோட் பண்ணுங்க.. நான் சொல்றது வருசத்துக்கு 10 லட்சம் வாங்குற பெண்மணிகள் பெறக்கூடிய சலுகைகளை... வீட்டுல குடிச்சுட்டு விழுந்துகிடக்குற புருஷனை, பாவப்பட்ட குழந்தைகளை, தனியொருத்தியா நின்னு கஷ்டப்பட்டு வேலை செஞ்சு காப்பாத்துறாளே பெண் அவளுக்கு எவ்வளவு சலுகைவேணா குடுங்க..வேண்டாங்கள.

விரைவில் உங்களிடமிருந்து ஒரு பதிவை எதிர்பார்க்கிறேன்.

நெசமாத்தான் கேட்குறேன் பிரபுதேவா பிரகாஷ்ராஜ் பற்றி திட்டி எழுதிய பத்திரிக்கைகளை உண்மையாகவே படிக்கவில்லையா ? இல்ல படிக்காத மாதிரி நடிக்குறீங்களா ? இல்ல படிச்சும் இந்த பதிவுல அத யூஸ் பண்ணமுடியாதுன்னு விட்டுட்டீங்களா ? பிரசாந்த் கிரஹலெட்சுமி மேட்டர்ல, பத்திரிக்கைங்க பிரசாந்தப் போட்டு கிழிச்சுட்டு, அப்புறம் உண்மை தெரிஞ்சதும், சத்தம் போடாம அடுத்த பெண் கொடுமைய பத்தி எழுதப் போய்ட்டாங்களே

feminist ,not a nayathara fan said...

யாரும் பிரபுதேவா செய்தது சரி என்று சொல்லவில்லை.எல்லா மக்கள் மத்தியிலும் இப்படியான சம்பவங்கள் நடை பெறுகின்றன. ஆண் செய்தாலும் பெண் செய்தாலும் குற்றம் குற்றமே ,பிரபுதேவாவின் படங்களுக்கு எதிராகவும் போர்க்கொடி பிடிக்கவேண்டும்..தவறு செய்ததைக் கூட மன்னிக்கலாம் ,இன்னொரு பெண்ணின் கணவனுடன் கள்ளத்தொடர்பு( இது காதல் இல்லை) வைத்திருப்பதை, இரண்டு குழந்தைகளின் எதிர்காலத்தை நாசமாக்குவதை நயன்தாரா வெளிப்படையாக செய்து திமிர்த்தனத்துடனும் ஆணவத்துடனும் அதை நியாயப்படுத்தி பேசுவதுதான் என் போன்ற பெண்களுக்கு ஆத்திரத்தை தருகிறது.இதெல்லாம் தனி மனித சுதந்திரம் என்று யாரும் புலம்பவேண்டாம் ,அப்படிஎன்றால் கொலை செய்வதும் தனி மனித சுதந்திரம்தான் ,யாரும் யாரையும் காதலிக்கலாம் ,ஆனால் மனிதாபிமானம் இல்லாத மற்றவர்களின் வாழ்க்கையை நாசப் படுத்தும் குடும்பத்தைக்குலைக்கும் தொடர்புக்கு பெயர் தனிமனித சுதந்திரம் அல்ல ,வடிகட்டிய இரக்கமற்ற பச்சை சுயநலம் ,அதைத்தான் இந்த கொழுப்பைக் குறைத்து கொழுத்த சம்பளம் பெறும் நடிகையான நயன்தாரா செய்கிறார்,அத்துடன் பிரபுதேவாவும்தான்

குறும்பு குண்டன் said...

பின்னோக்கி அவர்களுக்கு!

தங்களுடைய வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்
யதார்த்தமான வாதங்களை முன்வைத்திருக்கின்றீர்கள்.
இருவர் சேர்ந்து செய்யும் தப்பிற்கு ஒருவர் மட்டும் குற்றவாளியாக்கப்படுவது நியாயமா?? எனபதே இங்கு விவாதிற்கெடுக்கப்பட்ட விடயம்.
நயனைக் குற்றம் சொல்வதோ, பிரபுதேவாவை குற்றம் சொல்வதா என்பதில் பிரச்சினை இல்லை. சமூக பொறுப்புடைய ஒரு அமைப்பு எவ்வாறு தனது கோட்பாடுகளில் பிறழ்ந்து போகின்றது என்பதை சுட்டிக்காட்டவே நயன் பிரபு விடயம் உதாரணத்திற்கெடுத்துக்கொள்ளப்பட்டது.இங்கு பெண் உரிமையை வென்றெடுக்கப்போராடும் மாதர்சங்கங்களை நோக்கி வினவப்பட்டது நீங்கள் செய்வது சரியா? உங்கள் அணுகுமுறை நியாயமானதா? என்பதே!
ஆண், பெண் என்ற வேறுபாடுகளுக்கு அப்பால், ஒரு தப்பை சேர்ந்து செய்த இருவருக்கு தண்டனைகள் வேறுபடுவது நியாயமா? பத்திரிகை விமர்சனமோ, தனிநபர் விமர்சனமோ! தீர்வைத்தரப்போவதல்ல. போராட்டங்கள் தீர்வினையும் கருத்துப்பரவலைச் செய்யும். எனவே பொறுப்புடையவர் செய்யும் போராட்டம் பற்றி போராட்டவாதிகளிடம் கேட்டகப்பட்ட நியாயம் தான் இது.

உங்கள் கருத்துகளுக்கும் வருகைக்கும் நன்றி

ரவி said...

Me too !!!

குறும்பு குண்டன் said...

பெண்ணியவாதி அவர்களே!

ஒருவர் மட்டும் குற்றவாளியல்ல என்று ஏற்றுக்கொண்டதை வரவேற்கின்றேன்.

ஒருவர் கையை வீசும் போது அது அடுத்தவன் மூக்குநுனியை முட்டாதவரைக்கும் தான் தனிமனித சுதந்திரம். எனவே கொலை செய்வதை தனிமனித சுதந்திரம் என்ற வரையறைக்குள் பார்ப்பது பொருத்தமானதல்ல.

இருவரும் குற்றவாளிகளாயின் நயனுக்கு மட்டும் எதிரான போராட்டம் பிழை என்பதையும் ஏற்றுக் கொள்கிறீர்கள். வரவேற்கின்றேன் நன்றி

நயன் இளவயது பெண், பிரபுதேவா முதிர்ச்சியடைந்த குடும்பத்தலைவன், நயன் சபலத்தில் அல்லது ஏதோ ஒருவகையில் பிரபுதேவா மீது காதல் வயப்படும்போது நயனுக்கு அறிவுரை கூறக்கூடிய நிலையிலிருக்கும் பிரபுதேவா இதை தவிர்த்திருக்கலாமே!

இந்த காதல் விடயத் தீர்மானத்தில் நயனை விட பிரபுதேவாவிற்கே பொறுப்புகள் அதிகம். ஏனேனில் நயன் தனிமனிதர், பிரபுதேவா குடும்பஸ்தராக இருந்து சிந்தித்தே தீர்மானமெடுத்தார் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இயல்பாகவே பெண் வசப்படுகின்றவள் ஆண் வசப்படுத்துபவன் இது உளவியல் உண்மை எனவே இக்குற்றச்சாட்டில் நயனின் பங்கு என்ன என்பதை உங்கள் கணிப்பிற்கு விட்டுவிடுகின்றேன்.

நயன் தெளிவாக பேசுவது என்பது பிரபுதேவாவின் பலமான பின்னனியில்லாமலா? என்றும் சிந்திக்க வேண்டும்.

மற்றும் பாதிக்கப்படும் எல்லாப்பெண்களுக்காகவும் தயவு செய்து நியாயமாக குரல் கொடுங்கள்.
தவிர்த்து, தவிக்க விட்டு விடாதீர்கள்!

தங்களுடைய வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி

நானும் நயன்தாரா ரசிகனல்ல

கிடுகுவேலி said...

ஐயா....உங்கள் கருத்தோடு நானும் ஒத்துப் போகிறேன்...!!!! மிகவும் பலமான கருத்து...!! தொடரட்டும். வாழ்த்துக்கள்...!!!

Anonymous said...

i agree with your agruments, i am a women, and i might not respect Nyan anymore, especially after Chimbu incident,( an villu movie), bt i believe Prabhutheva shouldn't be treated as an innocent bystander. More thn anything, he should be criticized because he have been committed to a women who left her family for him, all this time. Why is Nayan thinking he will last longer with her...

Berita Blora said...

i agree with your opinion, keep your mind :)