Wednesday, September 30, 2009

நயன்தாராவுக்கு ஆதரவுக்குரல்


சில நாட்களாக எந்த செய்தி இணையத்தைத் திறந்தாலும் நயன்தாரா - பிரபுதேவா காதல், திருமணம் தொடர்பான செய்திகளே முதலிடத்தை பிடித்திருந்தன. இதில் எனக்கு என்ன பிரச்சினை என்று நினைக்கலாம். சத்தியமா ஒண்ணுமேயில்லை. காதல், கலியாணம் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். இன்னொருத்தியைக் காதலிப்பது என்பது குடும்ப பிரச்சினை. இதில நாங்க மண்டையை உடைக்க ஒண்ணுமேயில்லை. ஆனால் இவர்களது காதல் பிரச்சினையில் மாதர்சங்கங்கள் நயன் படங்கள் திரையிடப்படும் தியேட்டர்களில் முற்றுகைப் போராட்டம் செய்யப்போவதாக வந்த செய்தியில் தான் எனக்கு நிறைய கேள்விகள் (உட்கார்ந்து யோசிக்கவுமில்லை, ரூம் போட்டு யோசிக்கவுமில்லை) அதுவா வருது.

ஏதோ தேசிய பிரச்சினை போல இச்செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் நானும் அதுபற்றி பெரிய ஆய்வு செய்ய வந்திருக்கிறேன் என்று நினைத்தால் தயவு செய்து மன்னித்து விடுங்கள். அது எப்படியான காதலாக இருந்துவிட்டுப்போகட்டும். என்னுடைய நோக்கம் எல்லாம் இதனூடாக மாதர்சங்கங்களின் சில செயற்பாடுகளை விளங்கிக்கொள்வதுதான்.

பெண்கள் மேம்பாட்டிற்காகப் பெண்களால் அமைக்கப்பட்ட தன்னார்வ அமைப்புக்கள்தான் மாதர்சங்கங்கள். ஒரு பெண்ணுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது என்பதற்காக குரல் கொடுக்க பெண்கள் முன்வந்துள்ளது நல்ல விடயம், வரவேற்கப்பட வேண்டியது. ஆனால் தியேட்டர் வரை வந்துள்ள அவர்களின் போராட்ட வடிவம்தான் ஒரு தப்பான உதாரணத்திற்கு முன்னோடியாகப் போகின்றதோ என்ற ஐயம் எழுகின்றது.

இருவர்மீதும் சொல்லப்படும் செய்திக்கு, ஏன் நயன்தாராவை மட்டும் குற்றம் சொல்ல வேண்டும். ஒருவருக்கு மட்டும் ஏன் தண்டனை. பிரபுதேவாவும்; ஒரு நடிகர்தானே! அவரது படங்களைத் தடை செய்ய போராட முடியாதா? அல்லது அவருக்கெதிராக போராட்டம் செய்ய முடியாதா? இதன் மூலம், ஒரு ஆண் குற்றம் செய்யலாம், பெண்ணுக்கு மட்டும்தான் வரைமுறைகள் என்று! மாதருக்காக குரல் கொடுக்கும் இந்த மாதர்சங்கங்கள் சொல்லுகின்றனவா?? அப்படி வரையறுக்க முடியுமா! இது ஒரு அநீதிக்கெதிரான போராட்டம் என்றால். மீண்டும் அவ்வாறான ஒரு தப்பு நடக்கக் கூடாது என்பதற்கு முன்னுதாரணமாக அமையவேண்டாமா? இதற்கு பெண்ணியம், பெண்நவீனத்துவம் பற்றி பேசும் மாதர்சங்கங்கள் என்ன சொல்லப்போகின்றன?

ஏதோ வீட்டில் அடக்கமாக, அப்பாவியாகவிருந்த பிரபுதேவாவை, நயன்தாரா சொக்குப்பொடி போட்டு வைத்திருப்பது போலவும், வாயில விரலை வைச்சா கடிக்கத்தெரியாத அப்பாவியை விடுவிக்க போராடுவது போலவும் இருக்கிறது இவர்களது போராட்டம். ஒரு பெண்ணின் வாழ்க்கை பற்றிப் பெண்தான் சிந்திக்க வேண்டும் என்றால், மனைவி மீது அந்த மனிதருக்கு இல்லாத அக்கறை, எங்கோ இருக்கும் ஒரு பெண்ணுக்கு ஏன் வரவேண்டும்?? ஒரு பெண்ணின் வாழ்க்கை தன்னால் சீரழிக்கப்படுகின்றது என ஒரு பெண் சிந்திக்க வேண்டும் என்பதுபோல, தன்னால் இரண்டு பெண்களின் வாழ்வு சீரழிக்கப்படுகின்றது என்பதை ஏன் அந்த ஆண் சிந்திக்கக் கூடாது?. மாதர்சங்கங்களின் அடிப்படைக் கோட்பாடுதான் என்ன? நயன்தாராவை மட்டும் குற்றம் சொல்லி, உங்கள் போராட்டம் வெற்றி பெற்று குடும்பத்தை இணைத்து வைத்த பின்னா, மீண்டும் ஒரு பெண்ணுடன் போக மாட்டார் என்று என்ன நிச்சயம்? அவள் ஒரு சாதாரண பெண்ணாக இருந்தால், இதே போன்று போராட்டம் செய்வார்களா? நாணயத்தின் இரண்டு பக்கங்களை போல எந்தப் பிரச்சினையும் பார்க்கப்பட வேண்டும் என்பது எனது விருப்பம். ஒரேயொரு ஆதங்கம்தான் ஏன் இவர்களில் யாரும் பிரபுதேவாவை தப்பு செய்தவராகப் பார்க்கவில்லை?

காலம் காலமாக எமது காலச்சாரம் ஆண்மகனைத்தான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. சிலப்பதிகார காப்பியத்தில் மாதவி ஒதுக்கப்பட்டாளே தவிர, அவளைத் தேடிச்சென்ற கோவலன் அல்ல. நடக்கமுடியாத கணவனை விபச்சாரி வீட்டிற்கு சுமந்து சென்று விடுபவள் தான் கற்புக்கரசி என்பதும் எமது இலக்கியங்களில் கற்பிக்கப்பட்ட அற்புதம் (அசிங்கம்). அதே போல் சிவன் தொடங்கி முருகன், கிருஷ்ணர் வரை எந்தக் கடவுள்தான், ஒரு பெண்ணுடன் வாழவேண்டும் என்பதை கற்பித்துக் காட்டியிருக்கின்றது? எல்லோரும் வள்ளி திருமணத்தை கோயில்களில் விமர்சையாக கொண்டாடுகின்றோம், அதன் கருப்பொருள் பற்றிய விளக்கம் தெரியாததா என்ன! ஏன் அந்த மண்ணின் மாண்புமிகு முதல்வரே கால்மாட்டில் மனைவியும் தலைமாட்டில் துணைவியுமாகத்தானே காட்சி தருகிறார். (இப்பவே கண்ணைக்கட்டுதே! என்று அயர்ந்து விடாதீர்கள்)

மாதர்சங்கங்களின் கருத்துப்படி தமிழகத்தில் இதுவரை எந்தப்பெண்ணுக்கும் இப்படி ஒரு பிரச்சினை வந்ததேயில்லை. முதன்முறையாக ஒரு பெண்ணுக்குப் பிரச்சினை என்பது போல களத்தில் இறங்கியுள்ளன. கிராமத்தில் எண்பது சதவீதமான பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. நான் சந்தித்த பெண்களில் பலர், 'மனசில புதைச்சு வைச்சிருக்கிறோமய்யா, என்ன செய்வது பலபேரு இதனால வாழக்கையே இழந்திட்டாங்க, இருந்தாலும் கடைசிகாலத்தில நம்மகிட்டதான் வருவாக' என்று பதிலளிக்கிறார்கள். மாதர்சங்கங்கள் பலமாகத்தானே இருக்கின்றன ஏதாவது செய்யலாமில்லையா? என்று கேட்டால், 'ஆம்பளை என்றால் அப்பிடித்தான் கொஞ்சம் அனுசரித்துப் போ' என்று ஆலோசனைதான் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த இடத்தில் வராத அக்கறை, ஏன் இதில் மட்டும்?

தவறான வழிநடத்தல்களிலும், பிழையான கோட்பாடுகளிலும் சில மாதர்சங்கங்கள் எவ்வாறு இயக்கப்படுகின்றன என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணம். தமிழ்நாட்டில்; மாதர்சங்கம் என்பது ஒரு பலம் வாய்ந்த அமைப்பு, நியாயமான வழிநடத்தல் நிச்சயமாக 'பெண் மேம்பாடு' என்ற இலக்கை அடைய வைக்கும் அவர்கள் அரசியலுக்கும், அதிகாரத்துக்கும், பணத்திற்கும், புகழ்ச்சிக்கும் விலைபோகாத சந்தர்ப்பத்தில்.

இந்தப் பதிவை செய்துகொண்டிருக்கும் போது இன்றைய தினத்தந்தியில் 'கன்னியாகுமாரி பெண்ணைப் போல சென்னையிலும் இளம்பெண் கணவரின் மறுமணத்திற்கு எதிராக அவரது வீட்டின் முன்னால் பெற்றோருடன் போராட்டத்தில் குதித்தார்' என்ற செய்தி என்னைப்பார்த்து, நயனுக்கெதிராக என்றால் மட்டுமா! எனக் கேட்டது.

கொசுறு:

எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர் பிரபுதேவா, எனக்குப் பிடிக்காத நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. என்றாலும் அவரின் இடையழகு படுசூப்பர்......! ம்..................ம் ஓவரா வழிஞ்சிட்டனோ!

Tuesday, September 29, 2009

அம்மாவும் ....... சீரியலும்.... அவஸ்த்தைகளும்


இன்று பெரும்பாலான பெண்களின் பொழுதுபோக்கு, தொலைக்காட்சித் தொடர்களில் கரைந்து போகின்றது. பொழுதுபோக்கு அம்சம் என்று கூறப்பட்டாலும் அதிலிருக்கும் அவஸ்தைகளும் ஏராளம். பெரும்பாலான தொடர்களில் அழுகைச்சத்தத்தின் கதறலும் தகராறுக்காட்சிகளின் ஒலியும் அவஸ்த்தைகளைத் தருவதாகவே அமைகின்றன.

வீட்டு வேலைகள் சமையல் உட்பட எல்லாவற்றையும் 10.30 மணிக்கு முதல் முடிக்க முயலும் அவசரம். ஏதாவது மளிகைச்சாமான்கள் வாங்கிவைக்காவிட்டால், தாமதமானால் பொசுக்கெண்டு அம்மாவிற்கு வரும் கோபத்தை பார்த்துப் பயந்திருக்கிறன். முக்கியமாக சீரியலில் அன்று நடைபெறும் கதையின் தன்மைக்கேற்ப அவரின் உணர்வுநிலை இருப்பதால் வீட்டிற்கு வரும்போது நைசாக அக்காவிடம் இன்டைக்கு சீரியல்கள் எப்படி எனக் கேட்டு, அம்மா எப்படியிருப்பார் என்ற மனநிலையறிந்தே அம்மாவிடம் கதைப்பேன்.

இது மட்டுமா! அந்த நேரம் பார்த்து மின்சாரம் நின்றுவிட்டால் ' ஒருக்கா போன் போட்டுப்பார் எப்ப மின்சாரம் வருமென்று' எனக் கோபத்தில் கொதிப்பார். அங்குமிங்கும் நடந்து திரிவார். பொறுமையிழந்து மின்சார சபையையும் ஒரு வாங்கு வாங்கிவிடுவார். என்ன கொடுமைசார் இது என்று என்னை நானே கேட்டுக்கொள்வேன்.

அன்று எனக்கு அலுவலகத்தில் பதவியுயர்வு வழங்குவதாக அறிவித்தனர். சந்தோசத்தில் அரை நாள் லீவு எடுத்துக்கொண்டு சென்றேன். அம்மா வழமைபோல் சீரியலில். நான் சந்தோசத்தில் அம்மாவின் அருகில் சென்றேன். அம்மா அழுதுகொண்டிருந்தார். எனக்கு குழப்பமாகிப் போய்விட்டது. ஏற்கனவே அம்மாவிற்கு பிறசர், என்னவென்று விசாரித்தேன், ஆனால் அவர் விக்கி விக்கி அழுது கொண்டிருந்தார்! எனது சந்தேசமும் போய் ஒருவாறு அம்மாவை தேற்றி என்னவென்று கேட்டேன். ஏதோ ஒரு சீரியலில் மருமகள் அவளது மாமியாரை வீட்டைவிட்டு துரத்திவிட்டாளாம், மகனும் ஒன்றும் பேசாமல், ஆச்சிரமத்தில் போயிருக்கிறதுதான் நல்லது என்று சொல்லிவிட்டானாம். எனக்கும் நீ அப்படி சொல்லிவிட்டா! என்ன செய்வன் என்று நினைத்து அழுததாக கூறினார். அவரை தேற்ற பட்ட கஷ்டத்தை என்னென்று சொல்வது.

சீரியலின் சம்பவங்களிற்கேற்ப அவர்களது உணர்சிகளின் மாற்றம், அச்சம்பவங்கள் போல தமக்கும் நடந்துவிட்டால் என்ற ஏக்கம், வீட்டில் நடைபெறும் சாதாரண சம்பவங்களை சீரியலுடன் ஒப்பிட்டு அதே கோணத்தில் பார்க்கும் போக்கு, அச்சம்பவங்களையே உதாரணமாக கூறும் தன்மை, நாடகத்தில் சரியாகத்தான் சொல்லப்படுகின்றது என அதேபோல் பிடிவாதம் பிடிப்பது செயற்படுவது மட்டுமல்லாமல் அதைப்போல முடிவெடுக்கும் நிலை, போன்று ஏராளமான அவஸ்த்தைகள் இன்று சீரியல் தந்துள்ள பொழுது போக்கின் பக்கவிளைவுகள்.

சீரியல்களின் விம்பங்களாகிவிட்ட பெரும்பான்மை பெண்களின் சுற்றுவட்டத்தில் பல ஆண்கள் போக்கிடமற்றவர்களாக கடற்கரையிலும் பூங்காக்களிலும் சுண்டல் கடலைகளுடனும் நேரம்போக்கி தாமதாக வீட்டுக்கு வந்தால், சீரியல் பாணியில் இவ்வளவு நேரம் எங்க போனீங்க?? என்று ஆரம்பிக்கும் அவஸ்த்தைகளை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்வார்களா?

Sunday, September 27, 2009

தலையணை


என்றும்
எனைத் தாங்கும் சுமைதாங்கி
உணர்வுகளை ஒட்டுக்கேட்கும்
ஓற்றன்
அரற்றல்களை சகித்துகொள்ளும்
நண்பன்
உணர்ச்சிகளின் வடிகாலான
உதவியாளன்
யாருமறியா நிஜங்களை பகிர்ந்துகொண்ட
தோழன்
கண்ணீரில் கரையும்போது துடைத்துவிடும்
அன்னை


மொத்தத்தில் என் உணர்வுகளுக்கு
உரமாய் போன ஜீவன்
இன்று
தூக்கத்தில் நான் கட்டியணைத்ததால்
என் மனைவியால்
தூக்கி எறியப்பட்டவன்
என் சுவாசத்தின் எல்லைவரை
அவளுக்கே மட்டுமானது - இது
அவளின் வாதம்
அவனுக்குத் தெரியும்
அவள் குழந்தை மனம்
ஏனெனில்
எதையும் ஏற்கும் ஜீவன் அவன்!

Friday, September 25, 2009

ஒற்றைவார்த்தையில்.....!


கவிதை படிக்கிறேன்
உன்னைவிட அழகாக வர்ணித்திருப்பார்களா என்பதற்காக!
பூக்களைத் தொட்டுப்பார்க்கிறேன்
உன்னைவிட மென்மையானதா என உணர்வதற்காக!
வானவில்லை ரசித்துப்பார்க்கிறேன்
உன் புருவங்களின் வளைவைவிட அழகானதா என்பதற்காக!
அமைதியான கடலலையின் ஓசையை ரசித்துக் கேட்கிறேன்
உன் சிரிப்பொலியின் ரிதம் உள்ளதா என்பதற்காக!
மல்லிகை வாசத்தை முகர்ந்து பார்க்கிறேன்
உன் சுகந்தத்தை விட சுகமா என்பதற்காக!
சிற்பங்களை கூர்ந்து பார்க்கிறேன்
உன்னைவிட அழகாக வடித்திருப்பார்களா என்பதற்காக!
குயிலின் கூவலைக் கேட்கிறேன்
உன் குரலை விட இனிமையானதா என்பதற்காக!
கானமயிலின் நடனத்தை பார்க்கிறேன்
உன் நளினம் உள்ளதா என்பதற்காக!
மொத்தத்தில் எல்லாவற்றையும் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்
உன்னை நினைத்து...
உன்னைவிட அழகு இருக்கின்றதா என்பதற்காக!
ஒன்றுமே அழகில்லை உன்னைத்தவிர!
ஆனால்.....
நீ மட்டும் ......
என்னை ஏன் ....
'பிடிக்கவில்லை' என்றாய்!
ஒற்றை வார்த்தையில்.......!

Wednesday, September 23, 2009

தாய்ப்பாசம்


மோசமான நாட்கள்
உக்கிரமடைந்த போர்
வேட்டையில் கலைக்கப்படும்
மிருகத்தைப்போல ஓடுகின்றோம்

தொடர் குண்டுத்தாக்குதல்கள்
இரத்த ஓடைகள், பிணக்குவியல்கள்
மனிதப்பேரவலம்! உலகம் சொல்லிற்று
காப்பாற்றுவார் யாருமில்லை!

கோழியின் இறகுக்குள் பதுங்கும்
குஞ்சுகள் போல
பிள்ளைகள்;
உயிரைக்காக்கும் இறுதி முயற்சியில்
பதுங்குகுழிகள்!
அவையே சவக்குழியாகும் அவலம்!

இறுதியில்
ஆக்கிரமிப்பாளனிடமே போக வேண்டிய துர்ப்பாக்கியநிலை!
நீரேரி வழியாக வெளியேற நிர்ப்பந்தம்! நெஞ்சளவு தண்ணீர்
நடக்கமுடியாத அம்மா! எப்படி கொண்டு செல்வது
நடக்கக்கூட ஜீவனில்லை!

பெற்றெடுத்து தோளில் சுமந்தவள்
கூலிவேலை செய்து
என்னை வளர்த்தெடுத்தவள்!
மொட்டுவிடும் பருவத்தில் பிள்ளைகள்!
திரிசங்கு நிலையில் நான்,
யாருக்கும் வரக்கூடாத
துயரத்தின் உச்சம்!
என்ன செய்ய ஆண்டவா!

பேரப்பிள்ளைகளைக் கொண்டு போ
வாழவேண்டியதுகள்! என்றாள்
கலக்கமின்றி!
பார்வையில் அவளது தெளிவு
பேரப்பிள்ளைகளை காப்பாற்றும் ஆதங்கம்
என் கன்னத்தில் இருந்த
கண்ணீரை துடைத்து
கையை பிடித்து! நான் வருவன்! நீ போ என்றாள்!
விடைபெறும் இறுதித்தருணம்
அவள் கண்களில் தீர்க்கமான பார்வை!
அன்னையாக மட்டுமல்ல
தியாகத்தின் மறுவடிவமாகவும்
என் தாய்.....!
நடைபிணமாக வந்தேன்! திறந்தவெளிச் சிறைச்சாலைக்கு
தேடுகின்றேன்
அம்மாவை
இன்னும்.................!

Sunday, September 20, 2009

கனவைக் கலைத்தவள்......???


அந்திசாயும் அழகான மாலைப்பொழுது
கரை தழுவ முயலும் அலைகளின்
இனிமையான ஓசை,
இதமாக வருடிக்கொடுக்கும் குளிர்காற்று
ஆனந்தமாக கண்மூடி அனுபவித்துக்கொண்டிருந்தேன்.
திடீரென வீசிய சந்தனவாடை
என்னைத் திரும்பிபார்க்க வைத்தது.
ஒய்யாரமாக ஒரு தேவதை - எனைநோக்கி நடந்து வந்தாள்
பொறாமையால், சினங்கொண்ட கதிரவன் வேகமாக
மறைய முயல
மங்கிய ஒளியிலும் - அவளது
சந்தனநிற உடல் தகதகத்தது
காந்தபார்வையில் சிக்குண்ட எனது கண்கள்
இமைக்க மறுத்தன.
இதற்காகவே சாகலாமோ என்றெண்ணியது - மனம்
நான் பார்த்ததில் பேரழகியவள்
எனதருகே வந்தமர்ந்தாள்!
அவளது காந்தச்சிரிப்பில் சிக்குண்ட நான்
கட்டுப்பாட்டையிழந்து
அவளது கையை தொட்டுப்பார்த்தேன்.
பிறந்த குழந்தையின் மென்மை
ஆகா - என்ன அருமையான ஸ்பரிசம்
தேவதையின் மடியில்
அளவிலா ஆனந்தத்தில் சிக்குண்டு
சொர்க்கத்தில் மிதந்தபோது
தோள்பட்டையில் தட்டியது ஒருகை
என்னென்று பார்த்தேன்
தேனீருடன் நின்ற மனைவி
'கெதியா எழும்புங்கோ! கடைக்குப் போகவேணும்'.

Saturday, September 19, 2009

எங்கே தேடுவேன்???

அதிகாலை வேளை
நெஞ்சை உறையவைக்கும் - குளிர்
சுகமாய் நான் முகம் புதைக்கும்
மயிர்மெத்தைநெஞ்சு
எங்கே??
போய்விட்டார் வேலைக்கு.
தனிமையில் தொலையும் பகல் பொழுது
பொருண்மியமே மையமான புலத்து வாழ்வில்
தெலைந்து போகும் சுகங்களிவை.
என்றாலும்
மலர்ச்சி தரும் - அந்திசாயும் வேளை
வந்துவிடுவார்
வழிநோக்கி விழிகள் நிலைக்க
பொழுது நடுநிசிக்கு நகர்ந்தும்
வரவில்லை
புதிய இடம் - புரியாத மொழி
தெரியாத மனிதர்கள்
எங்கே தேடுவேன்???
இறைவா ...........

Friday, September 18, 2009

மறு ஐனனம்

காற்றின் ஸ்பரிசத்தைக்கூட
ரசிக்க தெரியாத எனக்கு
காதலால் உயிர் தந்தவளே!
உயிர் மட்டுமா தந்தாய்??
உயிருக்கு உணர்வூட்டினாய்!
எனக்கே என்னை ரசிகனாக்கினாய்!
வாழ்வின் அர்த்தங்களை புரியவைத்தாய்!
இன்னும்
எத்தனை அருமையான உணர்வுகள்
எல்லாம் உன்னால்
உன்காதலால் வந்தவை
காதலால் மறு ஐனனம் தந்தவளே!
எனக்கு நீயும் ஒரு தாய்தான்.

Tuesday, September 15, 2009

நிஐம் எது......?

நேற்றுவரை
என் நெஞ்சம் கவர்ந்த நாயகனாய்
உலா வந்தவனே!
இன்று மட்டும் ஏனடா
உன்
கோர முகத்தைக் காட்டினாய்
நான்
அழுதால் அழுதாய்
சிரித்தால் சிரித்தாய்
என் வேதனைகண்டு
துடியாய் துடித்தாய்
அத்தனையும் வேசமா?
உனக்கிருக்கும்
ஓராயிரம் முகங்களில்
எதுவடா
உன் நிஜமுகம்???
உனக்காக
சிலுவை சுமந்தேன்
நீயோ
சுமையை மட்டும் எனக்குத் தந்து
சுகம் சேர்த்தாய்
உன்
சுயநலத்துக்காக........

தெத்திப்பல்லு

சிரித்தாய்
பல்வரிசையின் ஒரிடத்தில் நின்றது - கண்கள்
அழகான தெத்திப்பல்லு - என்னை ரசிக்க வைத்தது
பார்த்தசைந்த கண்கள் உன்னில் நிலைகொண்டதை அறிந்தேன்
கனவில் நீ வந்தபோது!

எனது கவிதை

நானா அவன்
அவனை எனக்குள் தேடியபோது
கிடைக்கவில்லை
எனக்குள் நீ வந்தாய்
கிடைத்தது
எப்படி நடந்தது
யோசித்தேன்! யோசித்தேன்!
புரிந்தது
எல்லாம் உன்னால்
உன் அன்பும் காதலும்
வறண்ட எனது மனத்தையும் உணர்வையும் பசுமையாக்க
எனக்குள்ளிருந்து வெளிப்பட்டான்.