Thursday, November 26, 2009

'பண்ணி'கள் படுத்தும்பாடு

என்னடா பண்ணி மேய்க்கிற பண்ணையில் மேலாளர் வேலைக்குச் சேர்ந்திட்டானோ? என்று நீங்கள் நினைக்கிறது புரியுது. ஆனால் அதுவல்ல இது. எங்களுடைய தாய்த்தமிழ் மொழியில் கூட்டம் கூட்டமாகப் புகுந்து குதறும் 'பண்ணிகள்' பற்றியது. யாரையோ திட்டப்போறான் என்று நினைக்கிறீங்கள். அதுவும் இல்லை.


சரி, இனி விடயத்திற்கு வருகின்றேன். அண்மையில் தூரத்து உறவினர் ஒருவர் இரவு விருந்திற்கு அவரது வீட்டிற்கு வரும்படி அழைத்திருந்தார். அழைப்பைத் தவிர்க்க முடியவில்லை ஆதலினால் போய்விட்டேன். நகரத்திலிருக்கும் அவர்களுடன் அவ்வளவு நெருங்கிய பழக்கம் இல்லை என்றாலும் வீட்டிற்குச் சென்ற என்னை அன்பாக வரவேற்று நீண்டகாலம் பழகியதைப்போல பேசிக்கொண்டிருந்தார்கள்.

நாங்களிருந்து பேசிக்கொண்டிருந்த வீட்டின் மைய அறையின் அருகேயிருந்த அறையில் அவர்களுடைய ஏழு வயது நிரம்பிய மகள் படித்துக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு சென்ற அவளது அம்மா ' டர்ஷி எல்லாம் கரைக்டா றைட் பண்ணியிட்டியா? (சரியா எழுதியிட்டியா?) முதல்ல கொம்பிளீட்டா றீட் பண்ணிட்டு, (f)பர்பக்டா றைட் பண்ணுங்கோ. அப்படின்னா தான் (f)பெஸ்ட் ராங் கிடைக்கும்' என்று மகளை ஊக்கப்படுத்தினார். நவீன தமிங்கில வார்த்தைகள் சிரமமாகவிருந்தது புரிவதற்கு. மனதுக்குள்.... 'தமிழ் வளர்க' என்று நினைத்தேன்.

சமையல் முடித்ததும் மகளைக் கூப்பிட்டு 'றைட் பண்ணி முடிந்தால் வாங்கோ சீக்கிரம் ஈற் பண்ண வேணும் (அதுதாங்க சாப்பிடுவோம்). என்றார். மகளோ பாவம் தூக்க களைப்பில் சாப்பிட வந்து உட்கார்ந்த போது தாயார் கண்டிப்பாக ஈற் பண்ண முதல்ல கான்ட் வோஸ் பண்ண வேணும் ஓகேயா? சீக்கிரம் வோஸ் பண்ணிட்டு வா என்றார். எல்லோரும் ஒன்றாகச் சாப்பிட்டு முடித்தோம். பின்னர் மகளிடம் 'பிறஸ் பண்ணிட்டு, பிறே பண்ணிட்டு போய் சீக்கிரம் சிலீப்பண்ணுங்கோ'. எனக்கூறி விட்டு என்னிடம் வந்தார். 'பிள்ளைகளுக்குச் சரியான தமிழ் பழக்க வேணும். ஆங்கிலம் பேச வைக்கக்கூடாது. நான் சரியான கண்டிப்பு, வீட்டில் தமிழ் மட்டும்தான் பேசுவேன்' என்று எனக்கும் தனது கொள்கையைத் தெளிவாக விளக்கினார். திருவள்ளுவருக்குப் பக்கத்தில கண்டிப்பாக உங்களுக்குச் சிலை வைக்கவேண்டும் என மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

எவ்வளவு தூரம், எமது மொழியை நாங்களே சிதைக்கின்றோம் என்பதற்கு இச்சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டு. ஆங்கில மொழிக்கலப்பு என்பது சர்வசாதரணமாகிவிட்டது. ஆங்கில மோகத்தின் விளைவால் பிறந்த 'தமிங்கிலம்' தான் நாங்கள் தத்தெடுத்து வைத்திருக்கும் நோய்பிடித்த குழந்தை. இதில் எத்தனையோ தப்புத்தாளங்கள் உண்டு. அதில் ஒன்றுதான் 'பண்ணி' எனும் சொல்லின் பிறப்பு. ஆங்கிலச் சொல்லை தமிழில் இணைக்கும் போது பண்ணி என்னும் சொல்லையும் சேர்த்தாலே பேச முடியும். இதன் உருவாக்கம் இப்படி தான் நடந்தது. ஆனால் வேண்டப்படாத இந்தப் பிறப்பு இன்று வேகமாக, ஆழமாக வேரூன்றி விட்டது என்பது மட்டும் உண்மை, பிரிக்க முடியாக ஒரு சொல்லாகத் தமிங்கிலத்தில் இணைத்துக்கொண்டு விட்டது இந்தப் 'பண்ணி'. சாதாரணமாக பண்ணி இன்றி தமிழுடன் ஆங்கிலம் பேச முடியாது.

ஒரு மொழி காலத்திற்கு ஏற்ப வளர்ச்சியடையும் இலகுபோக்கில் இருக்க வேண்டும். புதிய சொற்கள் வரவேற்கப்பட வேண்டும் அவை அர்த்தமுள்ளவையாக அமையும் போது. பண்ணி எனும் இச்சொல் தனித்து நின்று செயற்படக்கூடியது அல்ல. பொருள் நிறைந்த ஒரு சொல்லும் அல்ல. ஒரு வெற்றுச் சொல்லாகவே பயன்படுத்தப்படுகின்றது. ஆங்கில வினைச்சொற்கள் தமிழில் வரும்போது 'பண்ணி' இல்லாமல் செயற்பட முடியாது. ஒரு வகையில் சொல்லப்போனால் ஆங்கில மொழியின் ஊடுருவலைத் தாங்கி நிற்கும் ஆங்கிலத்தமிழ் இணைப்புக்கானது இந்தச் சொல். ஒருமுறை இச்சொல்லின்றி ஆங்கில வினைச்சொற்களைப் பயன்படுத்திப் பாருங்கள் பெரும்பான்மையாக முடியாது. இதனால் இதை 'விசக்களை'என்று வரைவிலக்கணப்படுத்த வேண்டியுள்ளது.

தமிழில் ஆழமாய் வேரூன்றி விட்ட இச்சொல் களையப்பட்டால், ஆங்கிலத்தின் அரைவாசிக்கு மேற்பட்ட சொற்கள் தமிழில் வலுவிழக்கும். ஆனால் எப்படி சாத்தியமாக்குவது என்றுதான் தெரியவில்லை.

கொசுறு: நான் இந்தப் பண்ணி எல்லாம் உச்சரிக்கமாட்டன் என்றால் பாருங்கோ. இந்தப் பதிவை றைட் பண்ணிக் கொண்டிருக்கும்போது எனக்கு ஒரு சந்தேகம். உடனே பிறண்டுக்குப் போன் பண்ணி இரண்டு பேரும் டிஸ்கஸ் பண்ணினோம். அப்புறம் அதை வைச்சு கரக்ட் பண்ணி றிவியூ பண்ணிட்டு இன்ரநெற்றை ஓப்பின் பண்ணினால், அது வேர்க் பண்ணவில்லை. மீண்டும் றை பண்ணி பேஜ்ஜை றீபிறஸ் பண்ணிட்டு, அப்புறமா ஆட்டிக்கல ரைப் பண்ணினேன். ஒரு வழியாக புளொக்கில் அப்லோட் பண்ணி தமிழிஸ் இல் சப்மிற் பண்ணப்போனால்................ ஐயோடா சாமி. ஆளைவிடுங்க, நாட்டில இந்தப் பண்ணித் தொல்லை தாங்க முடியலைடா.

Monday, November 23, 2009

உனக்கு ஒன்றை சொல்ல வேண்டும்

இலையுதிர் கால வேளை
பளிங்கு போல தெரியும்
நிலாவின் மெல்லிய ஒளியில்
நிலா தரையிலா? என தடுமாற வைத்த
உன் முகத்தை!
யன்னலருகில் நின்று
ரசித்த காலங்கள் பல!

குளிர் காலவேளை
ஒரு சிறிய தீவில்
நெருப்பின் இதமான சூட்டில்
தனிமையில்
உன் அணைப்பின் சுகத்தில்,
இருந்தது எல்லாம் இன்னும்
பசுமையான நினைவுகளாக!

என்றாலும் நீ தற்போது
கொஞ்சம் கொஞ்சமாக
காதலிப்பதை நிறுத்தியதால்
நானும் அவ்வாறே நிறுத்த
முயல்கின்றேன்.
திடீரென நீ மறக்க நினைத்தால்
பின்னர்
என்னை பார்க்க முயற்சிக்காதே!
நானும் உன்னை மறந்திருப்பேன்.

நீ, விருப்பியிருந்ததை
முட்டாள் தனமென நினைக்கலாம்
வாழ்க்கைப்பாதையில்
சூறாவளி கடந்து விட்டதாக நினைக்கலாம்
பசுமையான நினைவுகளை ஆழ்மனதில் புதைத்து
என்னைக் கைவிட தீர்மானித்திருக்கலாம்
அந்த நாளையும், நிமிடத்தையும்
நினைக்கலாம்!
நான் இன்னொரு வாழ்க்கையை நோக்கி
நகர்ந்து விடுவேன் எனவும் கருதலாம்

ஆனால்!
எவ்வளவு நாட்களானாலும்
எத்தனை மணிகள் கடந்தாலும்
இனிமையான காதலால்
நீ எனக்கு விதிக்கப்பட்டவள்
என நினைக்கலாம்!
அன்று உன் மனதின் உந்தலில்
என்னைத் தேடுவாய்!
எனது காதல் எனக்கு சொந்தமானது
என பிரியப்படுவாய்!
அப்போதும் வெறுப்பதற்கும் மறப்பதற்கும்
ஒன்றுமிருக்காது
அப்போதும் எனது காதல் எமது காதலை
புதுப்பிக்கும் அன்பே!
எவ்வளவு காலமானாலும்
விலகமுடியாமல்
உன்னிடத்தில் இருக்கும்
என்காதல்

Monday, November 16, 2009

சாதனை

ஒரு லீற்றர் நீரில்
குளித்து
தமிழக அன்பர்
உலக சாதனையாம்
செய்தித் தாளொன்று
பளிச்சென்று தன்பக்கம்
நிரப்பியிருந்தது
அட.............
இதுவா உலக சாதனை?
இதைத்தானே நாங்கள்
தினமும் செய்து கொண்டிருக்கிறோம்
அகதிமுகாமில்.......!

Sunday, November 1, 2009

காதல் கணக்கு (?)

கள்ளங்கபடமில்லா மௌனத்தில்
கண்ணை பார்த்தேன் அவளை கணக்குப்போட!
அமைதியான பார்வையின் கூர்மையில்
கணக்குப்போட முயன்ற போது
தோற்றுப்போனது எனது கணக்கு
என்னடா கணக்கை தப்பாய் போடுகிறாய்
ஆசிரியர் தலையில் குட்டியது
நினைவிற்கு வந்தது

அவளின் மௌனத்தை கலைத்து
'கணக்கு' பண்ண கணக்குப்போட்டேன்
அவளின் கடைக்கண் பார்வையை
என்மேல் விழுத்தினால் கணக்குப்பண்ணலாம்;
என எண்ணியது மனது
பலன்; கிடைத்தது சில நாட்களில்
அவளின் நிசப்தமான கண்களில்
தென்பட்ட பூரிப்பில் எனது கணக்கு
சரியாயிற்று சந்தோசப்பட்டேன்
வாத்தியாரிடம் சொல்லமுடியாது
இது கல்விக் கணக்கல்ல
காதல் கணக்கு

சலனமற்ற பார்வை
முத்தாய் வாயிலிருந்து வரும்
சில வரிகள்
பேசாமடந்தையாயிருந்தாலும்
அடக்கமான குணம்
அளவான பேச்சு – வெகுவாக கவர்ந்தது
அழகான காதலைக் கொடுத்த
இறைவனுக்க நன்றி சொன்னேன்

வாழ்க்கைப்பந்தத்தில்
அமைதியாக கழிகின்றன பொழுதுகள்
வேலை வீடு மளிகைக்கடை என
வேகமாக ஒடியது வாழ்க்கை

நீண்ட நாட்களின் பின்
எனைக்கண்ட நண்பன்
எப்பிடியிருக்கு வாழ்க்கைக் கணக்கு என்றான்
மௌனமாக அவனைப் பார்த்தேன்
நான் மௌனியானதை கூறமுடியாமல்
மௌனமாக சிரித்து விட்டு நகர்ந்தேன்
எப்படிச்சொல்வது எனது கணக்கு
என்னை மௌனியாக்கிவிட்டதென்று