Friday, October 30, 2009

என்றென்றும் என்காதல்

அன்பே உன்னை
ஆழமாக காதலிக்கிறேன்
அதிகமாக காதலிக்கின்றேன்

உனது பேச்சின் இனிமையையும்
உனது அன்பான வார்த்தைகளையும்
அதனால் ஏற்படும் மலர்ச்சியையும்

நீ மென்மையாக தொடும்போது
ஏற்பட்ட ஸ்பரிசத்தையும்
இதழ்களால் இதயங்களை மௌனமாக்கி
உணர்வுடன் பேசி
பெண்மையை எனக்குள்
கிளர்ந்தெழச் செய்ததையும்

உனது களங்கமற்ற சிரிப்பையும்
அதில் தென்படும்
பளிங்குபோன்ற வெண்மையான அன்பையும்

பனி மலைமேல் மோதுவது போன்று
மலர்ச்சியை விரும்பியேங்கிய எனக்கு
ஒவ்வொரு நாளும்
நீ ஏற்படுத்திய சந்தோசங்களையும்

காலையில் தூக்கம் கலைத்து
தெம்பை தரும் உனது துயிலெழுப்பலும்
இரவில் தூங்க விடாமல் செய்யும்
உனது காதல் முனகல்களும்

அந்த நாட்களின் ஒவ்வொரு விநாடியையும்
உன் காதலின் மிதப்பில்
இருந்ததை எண்ணி
இன்றுவரை அல்ல என்றென்றும்
என் இதயத்திலிருந்து
உன்னை காதலிப்பேன்.

Tuesday, October 27, 2009

வாழ்க்கைச்சக்கரம்

பிரசவ வலி

இருட்டு உலகத்திலிருந்து
விடுதலையை விரும்பும் சிசுவின் போராட்டம்
கருவறையின் சுகமான வேதனை - தாயக்கு




பிரசவம்

உயிரின் புதிய வரவிற்காக
உயிரைப்பணயம் வைத்து
உயிர்கள் நடத்தும் போராட்டம்




குழந்தை

இருட்டு சிறையிலிருந்து
வெளிச்சச் சிறைக்கு
இடம்மாறும் கைதி




சிறுவயது

வண்ணாத்து பூச்சிபோல
வாழ்க்கையில் சிறகடித்துப்பறப்பதற்காக
கற்றலின் ஆரம்பம்





வாலிபம்

ஆலோசனைகளை அலட்டல்களாக்கி
அசட்டுத்துணிச்சலில்
தனித்து எதையும்
எதிர்கொள்ள துணியும் பருவம்




காதல்

ஓமோன்களின் உந்தலில்
எதிர்பாலினரில் ஏற்படும்
ஒருவகை உணர்வின் ஈர்ப்பு





திருமணம்

சுகமென தோன்றும் அழகான அன்புச்சிறை
சரியாக அமையாவிட்டால் துன்பச்சிறை





தந்தை

பிரசவித்தின் பரிதவிப்பு
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
எனும் அனுபவிப்பின் தொடக்கக்காலம்.





தாய்

உதிரத்தை உயிராக்கி - பின்
உதிரத்தை உணவாக்கி உயிர்வளக்கும்
உயர்ந்த தெய்வம்





வயோதிபம்

வாழ்க்கையை மீளஅசைபோட்டு
உலகைவிட்டு புறப்பட தயாராகும்
இறுதிக்காலம்

Sunday, October 25, 2009

முரண்பாட்டின் வினை(லை)!

கார்மேகம் சூழ்ந்து வர
கானமயில் ஆடிமகிழ
கார்குழலாள்
கடைத்தெருவில் நடைபவனிவந்தாள்.

மழைமேகம் இசைத்திட
மழைத்துளிகள் முத்தமிட்டது
மாந்தர் குடைவிரிக்க
மங்கையவள் மழையுடன் உறவாட
மழைத்துளி முகம் நனைக்க
மலர்ச்சியடைந்தது முகம்!
மலர்பாதம் மண்ணில் வைத்து
மங்கையவள்
மயில்போல் துள்ளிவிளையாடினாள்.

நங்கையவள் நளினம் பார்த்து
நானும் ரசித்து நின்றேன்
நான் நின்ற இடத்தில்
நட்டிருந்த கல் தடக்கி
நங்கையவள் நடைதளர்ந்தாள்

என்னவோ எனப்பதைத்து
எட்டிச்சென்று கைகொடுக்க
எழும்பினாள் நாணத்துடன்
எழும்பியவளின் முகம்பார்த்தேன்
என்மனமும் என்னிடமில்லை
எப்படியென்று இன்னும் புரியவில்லை.

எப்போதும் அவள் நினைப்பில்
என்னுடன் என்னவள் என
ஏங்கியிருந்த காலமெல்லாம்
எண்ணி நினைத்து
எப்போதும் மகிழ்வேன்
எல்லாக்கருத்தும்
எம்முள்ளே இணங்கிப்போக
என்னுடைய நாத்தீக கொள்கையையும்
எடுத்தியம்பினேன் எதிர்பார்ப்புடன்

ஒன்றில் மட்டும் ஒத்துப்போகவில்லை
ஒத்துப்போக முயன்றோம்
ஒத்துப்போக வேண்டுமெனில்
ஒருவர் கொள்கையை ஒருவர் விடவேண்டும்
ஒத்துப்போக முடியவில்லை – அதனால்
ஒத்துப்போய் பிரிந்து விட்டோம்
ஒத்துப்போகாத தத்துவங்களைப்போல

அவரவர் வாழ்க்கையில் சுதந்திரமாக
ஆழ்மனத்தில் காதல் வலிகள்
அம்மா பெண்பார்த்தாள்
ஆம் என்று தலையாட்டினேன்
நினைத்தது கிடைக்காவிட்டால்
கிடைத்ததை நினைத்து சந்தோசப்படு - என
எனக்கு நானே சமாதான தூதுவரானேன்

அமைதியாக ஓரிடத்தில்
அன்பர்கள் ஒன்றினைந்து
அமைதியான திருமண ஏற்பாடு
அவளும் வந்தாள்
அதிர்ச்சியுடன் நான் விழிக்க
அம்மா சொன்னாள் பெண்ணின் அக்காவென்று
அறைந்தது போலிருந்தது
அண்டமே சுழன்றது
ஆண்டவா! என்றேன்
என்னையறியாமல்

காப்பிடம்

காப்பகம்

இயந்திர வாழ்க்கையில்
பொருளாதார பூச்சிகளாக
சுருண்டுபோன உறவுகளிடம்
அன்புக்கு ஏங்கும்
குழந்தைகளும்
முதியோரும்
என்னிடத்தில்!


காப்பகம் - மகன்

சிறுவயதில் நான்
முதுவயதில் நீ
நேரமில்லை அப்போது உனக்கு
இப்போது எனக்கு
காலச்சுழற்சியை பார்த்தாயா?


காப்பகம் - தாய்

தோளில் சுமந்து
பாலூட்டி - திசைகாட்டியாய்
வழிநடத்தியவள்
வழிமேல் விழிவைத்து
வரவுக்காய் காத்திருக்கின்றாள்
காப்பகத்தில்!

Friday, October 23, 2009

சாட்சியாய்.....!

சுற்றமும் சூழலும்
புடைசூழ
மேளதாளங்கள்
ஆடம்பரங்களுடன்
அம்மி மிதித்து
அருந்ததி பார்த்து
படைக்கும்
உறவை காட்டிலும்!
உள்ளமும் உணர்வும்
புரிந்து கொண்ட
உறவே மேலானது
என்பதை
புரியாத மனிதர்களின் சாட்சியாய்!
எமது காதல்
இதயத்திலிருந்து வலிக்கின்றது!

Thursday, October 22, 2009

நினைவுகளில் என்றும் அவள்!

கார்மேகம் கதிர்மறைக்க
மெல்லிய குளிர்காற்று முகம் வருடியது
அவசரத்தில் நான் வீடு நோக்கி
நடந்து கொண்டிருந்தேன்.
திடீரென
முகத்தை வருடிய
துப்பட்டாவை விலக்கிப்பார்த்தேன்
அழகிய கண்கள் மன்னிப்பை விழிக்க
உதடுகளைக் குவித்து
மெல்லிய சிரிப்புடன்
மன்னிப்பு கேட்டாள்
மாலை இருட்டிலும்
பிரகாசித்த அவளது
கதைபேசும் விழிகளுடன்
கதைபேச மறுத்தது விழிகள்!
தடுமாறிப்போனது இதயம்!


மோனலிசா ஒவியத்திற்கு போட்டியான
குறும்புத்தனமா என
பதில் தேடி தோற்றது மூளை
அவள் பார்வையின் வசிகரம்
கண்களின் சொர்க்கமாயின
மெலிதான சிரிப்பு
உணர்ச்சியலைகளை உருவாக்கிக்கொண்டிருக்க
கட்டிலில் புரண்டு புரண்டு படுத்த போது
அம்மா கேட்டாள் சுகமில்லையா? என்று
அசடுவழிந்தேன் ஒன்றுமில்லை அம்மா என்று

ஒரே பார்வையில் என்னை
வசீகரித்தவள்
நினைவுகளின் நிஐத்திற்காக
நினைவுகளில் அவளைச்சுமக்கின்றேன்
நம்பிக்கைதானே வாழ்க்கை!.

Tuesday, October 20, 2009

முத்தமிழ் அறிஞர் கலைஞரிடம் ஒரு பகிரங்க வேண்டுகோள்...!

அதிகாலை வேளை, நகரத்து சலசலப்பு சந்தடியால் தூக்கத்திலிருந்து விழித்தேன். மனைவி தலைவலி மருந்து வாங்கிவரும்படி கேட்டாள். மருந்துக்கடையை தேடி, தமிழ் நாட்டின் தலைநகரின் சாலையோரம் நடந்து கொண்டிருந்தேன். புதிய இடம், புதிய மனிதர்கள், என்றாலும் என் மூதாதையர் வாழ்ந்த தமிழ்நாடு என்பதால் புதிய இடத்திலிருக்கும் உணர்வு ஏற்படவில்லை.


மருந்துக்கடையை தேடிய நான் கடைசியாக 'மெடிக்கல்ஸ் சாப்'பைச் சென்றடைந்தேன். கடையில் விற்பனையாளர் ஆங்கிலம் கலந்த தமிழில் உரையாடியதைக் கேட்க வியப்பாக இருந்தது. நான் வாங்கவேண்டிய மருந்துக்கு கொடுக்க வேண்டிய பணம் பத்து ரூபா. என்னிடமிருந்ததோ நூறு ரூபா தாள்கள், எனவே நூறு ரூபா தாளை மாற்ற முடியுமா? என விற்பனையாளரிடம் கேட்டேன். என்னை விழித்துப் பார்த்த அவர் 'நீங்க என்ன பேசுறீங்கன்னு புரியல்லை சார் ' என்ன 'லாங்குவிச்' பேசுறிங்க? தமிழ் தெரியாதா? என்றார், எனக்கு தூக்கிவாரிப்போட்டது. என்றாலும் பொறுமையாக ஆங்கிலத்தில் Do you have 100 rupees change? என கேட்டேன். எனைப்பார்த்து ஏளனமாக சிரித்த அவர் 'கன்றட் றுப்பீஸ் சேஞ்ச் என (f)பெஸ்டே தமிழ்ல கேட்டிருக்கலாமே! சார்' என்றார். அந்நிய மொழியின் ஊடுருவலின் தாக்கம் எந்தளவு தமிழை சிதைத்து சின்னாபின்னமாக்கி இருக்கின்றது என்பதை நடைமுறையிலுணர்ந்தேன்.

'வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாடு' என்ற பெருமைகொண்ட நாடு. மனிதர்களை வாழவைப்பது மனிதாபிமானம். ஆனால் தனது மொழியின் சுவையை, அதன் அழகை மறந்து, (கேவலமாக எண்ணி) மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கும் என்பது போல வெள்ளையனிடமிருந்து வந்த ஆங்கிலத்தையும் கலந்து பேசுவது ஏன்? ஏன் மொழிப்பற்று விட்டுப்போயிற்று?

நான் ஆங்கில மொழியை எதிர்ப்பவனல்ல. நவீன தொழில்நுட்பம், வியாபாரம், சர்வதேச தொடர்பாடல், மேற்கல்வி போன்று பல விடயங்களுக்கு ஆங்கிலம் அவசியம். ஆனால் எமது மொழி மக்களிடம் எம்மொழியில் மட்டும் பேச வேண்டும். எந்த மொழியில் பேசினாலும் அந்த மொழியில் மட்டுமே பேச வேண்டும். எமது மொழியை அழியவிடக்கூடாது என்பதே எனது கோட்பாடு. எதில் கலப்படம் வந்தாலும் அழிவு அழிவு தான். அப்படியாயின் மொழி அழிந்து விடுமா? என எனக்குள் ஒரு கேள்வியெழுந்தது.

பலவேறு நாடுகளில் மொழியை பாதுகாத்து, உலக விடயங்களையும் அறிவையும் உள்வாங்கி தமது மொழி அழியவிடாமலிருக்கும் மொழிப்பற்றை பல நாட்டு மக்களிடம் பார்த்துள்ளேன். உலகமயமாக்கலுக்குள்ளும் அடிபட்டுப்போகாமல் தங்களது தனித்துவத்தை போற்றி மொழியை பாதுகாத்து வளர்க்கும் அக்கறையுடன் பலவேறு மொழி பேசும் மக்கள் மத்தியில் செம்மொழி மைந்தர்களிற்கு ஏன் இந்த அலட்சியம்?.

மொழி அழிவின் வேகத்தை எடுத்தியம்பி நிற்பவை வியாபாரநிலையங்களின் 'தமிங்கில' பெயர்ப்பலகைகள். விற்பனை நிலையத்தின் பெயரை ஆங்கிலத்தில் எழுதினால் மொழி தெரியாதவர்கள் படிப்பார்கள், ஆனால் நல்ல தமிழ்ப்பெயர்கள் இருக்கும் போது, ஆங்கில சொல்லின் தமிழ் உச்சரிப்பில், புதிய தமிழற்ற சொற்களை பெயர்ப்பலகைகளில் எழுதுவதில் என்ன இலாபம் என்பது எனக்கு புரியாமலிருக்கின்றது. இதிலென்ன விளம்பர, வியாபார உத்தியுள்ளது? ஏதாவது புரிகின்றதா? எம்மொழியில் இல்லாத ஒன்றிற்குப் பொருத்தமான சொல்லை உருவாக்குவது பொருத்தமானது. மண்வெட்டி என்னும் தமிழ்ச்சொல் ஆங்கில அகராதிகளில் பயன்படுத்துவைதைப்போல சில சொற்களை உருவாக்கலாம். ஆனால் தமிழில் போதுமான கலைச்சொற்கள் உள்ளன.

இலத்திரனியல் ஊடகங்கள், பதிவு ஊடகங்கள், மற்றும் தொலைக்காட்சி, திரைப்படம், சிற்றலை போன்றவை மக்களை இலகுவாக சென்றடைந்து ஆதிக்கம் செலுத்தும் ஊடகங்கள். ஆனால் இவையே மொழியழிவின் மிகப்பெரிய பொறுப்பான வாரிசுகளாக இருக்கின்றன என்பதுதான் உண்மை. தமது மொழியில் இல்லாத சுவை வேறு எதிலிருக்கும் தமிழனுக்கு! ஊடகங்கள் என்ன தான் விளக்கங்களை கூறினாலும் தமது சமூக பொறுப்பைப்பற்றி கவலைப்படாமல் பணம், வியாபாரம், விளம்பரம் என்ற ஒரே நோக்கத்தில் சமூகத்தினுடைய மொழியை அழிக்கும் உரிமையை எடுத்து சரியாக செய்கின்றனர் என்றால் மிகையாகாது.

போதாக்குறைக்கு கவிஞர்களும் எழுத்தாளர்களும் சேர்ந்து காசு கிடைக்கின்றது என்பதற்காக, பாடல்களிலே படைப்புக்களிலே ஆங்கிலத்தை கலக்கவிட்டு அதற்கு பரிசு கொடுத்து கைதட்டி மகிழ்கின்றார்கள். கவிஞர் தாமரை போல சிலர் தனித்து நின்றாலும், இவர்களுக்கு எதிர்புலத்தில் மொழியை வியாபார பார்வையில் பார்க்கும் புலமையாளர் பெருவெள்ளத்தின் முன், மொழி அழிவு சாதாரணமாக நடக்கின்றது.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழ் நாட்டில் பெரியோர்கள், புலவர்கள் என எத்தனையோ பேர் சுமந்து, கட்டிக்காத்து வந்த மொழி சிதைக்கப்படுவதற்கு, அந்நியமொழிக் கவர்ச்சியில் கட்டுண்டு இருக்கும் பொறுப்பற்ற மொழியின் மைந்தர்கள் எடுத்தியம்பும் காரணங்களை கேட்டால் 'இதையறிந்தா தமிழ் புனைந்தோம்' என அதிர்ச்சியில் உறைந்திருப்பார். முன்னோர்கள் கட்டிக்காத்து வந்த நல்சுவைத்தமிழை அடுத்த சந்ததிக்கு சரியாக தாங்கி கொடுப்பர்களா! இந்த நவீன வியாக்கியானக்காரர்கள்?

அண்மையில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்க விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய முத்தமிழ்காவலர் கலைஞர் அவர்கள் 'திரைப்படத் தொழிலாளர்களுக்கு குடியிருப்புத் தொகுதியென்றைக் கட்டிக்கொடுக்க அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அந்த குடியிருப்புத்தொகுதிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று சிலரிடம் நான் வினவியபோது சித்திரபுரி என்று பெயர் வைக்கலாம் என்று கூறினர். சித்திரம் என்பது வடமொழி சொல். சித்திரம் என்பதற்கு சரியான தமிழ்ச்சொல் "ஓவியம்" எனவே "ஓவியபுரி' என்று பெயர்வைக்கலாம் என பரிந்துரைக்கின்றேன்' என்றார். நல்ல விடயம் முத்தமிழ் அறிஞரே வடமொழிக்கலப்பை விரும்பாத நீங்கள் ஆங்கிலக்கலப்பைப்பற்றியும் சிறிது கவனம் செலுத்தலாமே! ஆங்கிலக்கலப்பால் சிதைவடைந்து கொண்டிருக்கும் செந்தமிழை காப்பாற்ற, ஏன் பெரியளவில் நடவடிக்கை எடுக்கவில்லை? குழந்தைக்கு நோய் ஏற்படும் போது மருந்து கொடுக்க வேண்டும். சில குழந்தைகள் மருந்தை தாங்களாகவே உட்கொள்வர். பெரும்பான்மையான குழந்தைகள் மருந்தை இலகுவாக உட்கொள்ளமாட்டார்கள் சில பெற்றோர் இனிப்புடன் சேர்த்து கொடுப்பார்கள். பலர் வற்புறுத்தி கொடுப்பார்கள். இறுதியாக பெற்றோர் எப்படியாவது மருந்தை கொடுத்துவிடுவர்கள். ஏனெனில் பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்பது தன் குழந்தையாதலால். அது போலத்தான் தமிழும்.

தமிழ்மொழியில் பெயர்வைக்கும் படங்களுக்கு வரிவிலக்கு வழங்குவதில் உள்ள அக்கறையுடன் (படைப்புகளில் தமிங்கில சொற்களை பயன்படுத்தினால் கூடுதல் வரி அறவிடப்படும் என்றும் சட்டம் இயற்றலாம்) தமிழ் மொழியில் ஆங்கிலக்கலப்பை தடுக்க உங்களது புலமையை, செல்வாக்கை, அதிகாரத்தை பாவித்து, சட்டத்தை இயற்றி நடைமுறைப்படுத்தி, மொழியழிவை காப்பாற்றலாமே? என்று முத்தமிழ் அறிஞரும் செந்தமிழ் காவலரும் தமிழகத் தலைவருமான கலைஞரை நோக்கி கேள்வி கேட்க தோன்றுகின்றது.

தமிழின் உற்பத்தியிடம் தமிழ்நாடு. மொழி, படைப்புகள் ரீதியாக உலகத்தமிழ் மக்களை ஆளுமைசெய்வது தமிழ்நாடு. எனவே தங்களின் பொறுப்புணர்வை அலட்சியம் செய்யாமல் தமிழை காக்கும் தார்மீக பொறுப்பையுணர்ந்து செயற்பட்டால் தமிழ் தமிங்கிலமாவதை தடுக்கலாம். கலைஞரே நீங்கள் தான் முத்தமிழ்காவலர், தமிழை செம்மொழியாக்கியவர். ஆனால் நடைமுறையில் மக்களுக்கு இலகுவில் சென்றடையும் அடிப்படையான விடயங்களில் தமிழ் வழக்கொழிந்து போகின்றது. மாற்றங்களை அடிமட்டத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். உங்கள் காலத்திற்குப்பின் மொழிப்பற்றுடன் மொழியறிவுடன் யாரும் ஆட்சி அதிகாரத்திற்கு வரமாட்டார்கள். அப்படியொருவர் வந்தால் அப்போது தமிழ் மொழி இருக்குமா? என்பது சந்தேகமே. தமிழ் வளர்ச்சிக்குப் பலகாரியங்களைச் செய்த நீங்கள் மொழிக்கலப்பைத் தடுக்க, மொழிக்கலப்பின் ஆணிவேர்களை அறுத்து, விழிப்புணர்வு மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகளினூடாக தமிழைக்காப்பாற்ற முயற்சியெடுத்தாலே அன்றி உங்களுக்குப் பிற்பட்ட காலத்தில் எதுவும் பெரியளவில் நடக்காது. இதைச்செய்வீர்களானால் உங்களின் மிகப்பெரிய சாதனையாக உலகத்தமிழர்களால் உலகமுள்ளவரை நீங்கள் நினைவுகூரப்படுவீர்கள்.

Monday, October 19, 2009

முத்தமிட ஆசை ..........!

நீ அங்கே நான் இங்கே
யார் எம்மை சேர்த்துவைப்பார்கள்
யார் யாரோ சேர்ந்து நின்று
எம் இருவரையும் பிரித்துவிட்டார்களே
இதனால் யாருக்கென்ன லாபம் என்று
தினம் தினம் விடைதேடுகின்றேன்
இன்னும் கிடைக்கவில்லையே விடை எனக்கு
உன்னை விட்டு வந்த நாள் தொடக்கம்
என் கண்மணிகள் நிம்மதியாய் உறங்கவில்லை
உன்முகத்தின் அழகும்
நீ இறுதியாய் சிந்திய சிவப்பு நிற கண்ணீரும்
இன்னும் என் நெஞ்சில் நெருப்பாய் எரிகின்றது
இதை அணைப்பதற்கு யாருமில்லை இங்கெனக்கு!
உன்னிடமிருந்து என்னை பிரித்தவனை
எப்படி நான் எதிர்கொள்வேன் என்று
இங்கு தினம் தினம் எனக்குள்ளே திட்டமிடுகின்றேன்
உன்னை விட்டு நான் இங்கு வந்ததனால்
என்மீது உனக்கு கோபம் அதிகம்
அது எனக்கு நன்றாகத் தெரியும்
அந்த அரக்கனோடு சேர்ந்து வாழ
என்னால் முடியாது அது உனக்கு நன்றாக புரியும்
ஒன்றை மட்டும் சொல்கின்றேன்
விரைவில் நாம் இருவரும் ஒன்றாய் சேர்வோம்
அப்போது உன்னை அணைத்து முத்தமிட முடியாவிட்டாலும்
உன்மேனியெங்கும் முத்தம் தந்து
உன்மீது படுத்துறங்கும் காலத்திற்காய்
காத்துநிற்கிறேன்
நான் பிறந்த தாயக மண்ணே...!

Friday, October 16, 2009

தீபாவளி நாளில்.....................!

முற்றத்து மல்லிகை தன் இதழ்களால் புன்முறுவல் பூக்க
நறுமணம் பரவுகின்றது - என் இல்லமெல்லாம்
தீபத்திருநாளாம் என்பதனால்
முழுகிய கூந்தலில் நீர் சொட்டச் சொட்ட
என் மனையாள் இல்லமெல்லாம்
சாம்பிராணி காட்டுகின்றாள் !!!
மூத்தவளோ முழுகியிட்டு வாங்கோப்பா
கோணேசர் கோயிலுக்கு போவம் என்றாள்
இளையவனே பட்டாசு வாங்கித்தா வென்று பம்பரமாய் சுற்றுகின்றான் !!!
என் அம்மாவோ
கௌரிகாப்பொடுக்க போகவேணும்
காளியாச்சி கோயிலுக்கு கார்பிடிச்சு வாவென்றார்!!
அப்பா மட்டும் வழமைபோல்
சாப்பாடு போடெனக்கு
வயலுக்கு போகவெணும்
வரப்புவேலை கிடக்கென்றார்;!!!
என்ன செய்வதென்று எனக்கொன்றும் புரியவில்லை
கார் பிடிக்க போவமென்று கால் சட்டை போட்ட போது
என் கால்கள் நனைகின்றது !!!
என்னவென்று திகைத்தெழுந்தேன்
மழைநீர் வந்தது கூடாரத்துக்குள்
மண்வெட்டியை எடுத்தேன்
அணை போட!!!
பக்கத்துக் கூடாரங்களிலும்
இதே சலசலப்பு
முட்கம்பியடித்த எம் அகதிமுகாமெல்லாம்!!!

Thursday, October 15, 2009

ஏக்கம் !!!

நான் எழுதும் தொடர் கவிதைகளை
கேட்டுப்பார்
எம் காதலின் ஆழத்தை எடுத்துரைக்கும் !!!
கடற்கரை மணலில் நாம் இருந்த இடங்களை
கேட்டுப்பார்
எம் எதிர்கால வாழ்க்கை பற்றிய கதைகளை
கூறி சிரிக்கும் !!!
ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளை
கேட்டுப்பார்
அழகான உன் பாதங்களை தொட துரத்தி
களைத்து ஓய்ந்ததை கதைகதையாய்
சொல்லும் !!!
முழுநிலவைக் கேட்டுப்பார்
எம் சத்தமில்லா கூடல்களை பார்த்து வெட்கித்து,
முகில் கூட்டங்களை துணைக்கு அழைத்ததை
சொல்லும் !!!
என் கண்களைக் கேட்டுப்பார்
உன் கனவுகளிலிருந்து விடுபட விரும்பாமல்
திறக்க மறுத்ததை சொல்லும் !!!
பார்க்குமிடமெல்லாம் உன் நினைவுளை
பதித்து சென்றவளே !!!
நீயில்லாத பொழுதுகளில்
உன்னைத்தவிர எல்லாவற்றையும்
மறந்து போகின்றேன்
இதைத்தான் சொன்னாயா
நீ என்னருகில்
இல்லாவிட்டாலும்
என்னுடன் முழுமையாக
இருப்பாயென்று !!!

ஆராதனாவும் முப்பது நாட்களும்

மிகவேகமாக கடந்தது ஆராதனாவுடன் முப்பது நாட்கள். ஆக்கங்களைப் பதிவு செய்து புதிய நண்பர்கள், அறியாத மனிதர்களுடன் கருத்துப்பரிமாறும், கருத்து மோதல் செய்யும் வித்தியாசமான அனுபவம். ஒரு வேறுபட்ட புதிய உலகம்.நவீன தொழில்நுட்ப வளாச்சி தந்த புதிய ஊடகப்பதிவு. சுய சிந்தனைகள், கருத்துக்கள்,உண்மைகள், உணர்வுகளை பகிரும், பட்டைதீட்டும், அறிந்து கொள்ளும் அழகான தளம் வலைப்பூ. பதிவுகளை செய்யும் போது சுகமான பிரசவத்தின் பதட்டம், பின்னூட்டங்கள் வரும்போது சந்தோசம் போன்றன வலைப்பூ தந்த அனுபவங்கள்.

கவிதை, கட்டுரை, விவாதங்கள் என மனதில் உதித்தவற்றை கிறுக்க, அதற்கு கருத்துக்கூறும்போது ஏற்படும் ஒரு புத்துணர்ச்சி உத்வேகத்தை தர, தேடலும் இணைந்து இப்புதிய உலகத்தில் நடைபயின்று முப்பது நாட்கள் இன்றுடன்.

தொடர்ந்து வந்தும் நயமான கருத்துக்களைப் பின்னூட்டியும் ஆக்கம் தரும் நண்பர்களான கதியால், முல்லைப்பிளவன்,கவி, பொன்னி , பவி, க.பாலாஜி, வெண்ணிற இரவுகள், புலவன் புலிகேசி, தேவன்மாயம், வசந்குமார், சூரியா கண்ணன், நாமக்கல் சிபி, வால்பையன், அத்திவெட்டி பாரதி, ரமேஸ், அருள், அமுதா கிருஷ்ணன், துளசிகோபால், பிரபா, நிலாமதி, வெங்கட், சந்திரவதனா, ரங்குடு, பின்னோக்கி, உத்தம புத்திரன், ஜிவிதன், சிங்கக்குட்டி, துபாய்ராஜா, பிரியமுடன் வசந், எலட், வனம் இராஜராஜன்,விஜய்,செந்தழல் ரவி, அருள், கோகுல், சந்ரு, ரப் மற்றும் பெயரில்லாப் பின்னூட்டுனர்களுக்கும் தமிழிஸ், உலவு, தமிழ்மணம், தமிழ் திரட்டி தளங்களினூடாக வாக்களித்து ஊக்குவித்த அன்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவிப்பதுடன் உங்கள் தொடர் ஆதரவையும் கருத்துக்களையும் எதிர்பார்க்கும் ஆராதனாவின் வலைப்பூக்கள் பதிவாளர்கள்.

Monday, October 12, 2009

ரஜினியின் ஆன்மீகப்பாதை


தமிழ்நாட்டின் சுப்பர் ஸ்டார் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம்,பணம், புகழ், செல்வாக்கு போன்ற எல்லாவற்றைப் பெற்றிருந்தும், இமயமலையில் உள்ள பாபாவின் குகைக்கு கடினமான பாதையில் பயணித்து, அமைதியான தியானம் செய்கின்றார் என்பதில் புரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் என்ன?

ஆண்டவனை அடைய வேண்டுமானால், முதலில் பணம், புகழ், செல்வாக்கு போன்ற நிலையற்ற இச்சைகளில் இருந்து விடுபட்டு இறைவனை நோக்கி தியானம் செய்தல் வேண்டும். ஆனால் பணமே மையப்பொருளாகிவிட்ட இந்த உலகத்தில் எவ்வளவு பணத்தைச் சம்பாதிக்கலாம் என்ற ஒரே நோக்கத்தில், அநியாயங்களையும் பித்தலாட்டங்களையும் ஏமாற்று வேலைகளையும் இன்றைய மனிதன் செய்து கொண்டிருக்கின்றான். உயிர்காக்கும் மருத்துவத்துறையிலிருந்து கல்வித்துறை வரை எல்லாவற்றிலும் பணம். பணம் மட்டுமே இலக்காகக் கொள்ளப்படுவதால் எவ்வளவு பேர் சிரமப்படுகின்றார்கள். மனிதாபிமானம் செத்து பண அபிமானம் மேலோங்கிச் செல்கின்றது. இதனால் தானோ என்னவோ 'கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீ தான் அதற்கு எஐமானன் கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அது தான் உனக்கு எஐமானன் வாழ்க்கையின் அர்த்தம் புரிந்துவிடு' என்பனூடாக பணம் எஐமானன் ஆனால் மனிதம் செத்துவிடும் தத்துவத்தைச் சொல்லியிருக்கின்றார்.

எளிமை, கருணை, ஆன்மீகம் போன்றவற்றின் தற்கால வாழும் உதாரணம் ரஜினி. அவரிடம் எவ்வளவோ வசதிவாய்ப்புகளிருந்தும் பாபா குகையை நோக்கி ஒரு சாதாரண மனிதனாக, ஆபத்துகள் நிறைந்த பாதையில் செல்லும் காட்சியைப் பார்க்கும் போது பிரமிப்பாகவே இருக்கின்றது. 'வாழ்க்கை என்பது இதுதான்' என்பதை இயல்பாக எடுத்துக்காட்டும் ஒரு வாழும் உதாரண புருசனாக, ஏன் இச்சமூகத்திற்கு நல்லவிடயங்களை சொல்ல வந்த அவதாரமாகவோ, ஆட்கொள்ளப்பட்ட மனிதனாகவோ ரஜினி தெரிகின்றார். ஆன்மீகச் சிந்தனைவாதியாகவும் தீர்க்கதரிசியாகவும் மட்டுமல்லாமல் பல்லாயிரம் மக்களை குறிப்பாக இளைஞர்களைக் கவரக்கூடிய தெய்வீகசக்தியுள்ள அவரை ஒரு வகையில் 'ரஜினிபாபா' என்றே அழைக்க தோன்றுகின்றது.

எளிமையான மனிதரான ரஜினியின் தனிப்பட்ட வாழ்வைப் பற்றிய விவாதங்களுக்கு அப்பால், மனித வாழ்வியல் தத்துவங்களின் அடிப்படையில் நோக்கும் போது , ஆசைகளிலிருந்து விடுபட்ட ஆன்மீகம்தான் வாழ்வின் நிறைவு. இவரைப்போல வாழும் உதாரணபுருசர்கள் வாழும் காலத்தில் அவர்களின் கருத்தை உள்வாங்கி, பின்பற்றி மனிதநேயம் மிக்கவர்களாக மட்டுமல்லாமல், செல்வாக்கினாலும் அதிகாரத்தினாலும் அடுத்தவர்களின் வாழ்வைச் சிதைத்து பாவங்களைச் செய்யாமல் குறைந்தது மனிதனாகவாவது வாழ வேண்டும். எல்லோரையும் மதித்து, அன்புசெலுத்தி மனிதம் தழைத்தோங்கச் செய்யவேண்டும் என்பதே ரஜினியின் பயணம் சொல்லித்தரும் வாழ்வியல் செய்திகள்.

Friday, October 9, 2009

முதலிரவு


மனதில் புத்துணர்ச்சி
இனம்புரியா சந்தோசம்
அறையினுள் நுழையும் போது
கட்டிலின் மூலையில்
பவ்யமாக இருந்த என் அழகுப்பதுமை
எத்தனை நாள் காத்திருப்பு
இந்த ஒரு கணத்திற்காக!
பூரிப்பில் அருகில் சென்றமர்ந்தேன்
பரபரப்பு
சற்று நேரம் ஆசையுடன்
அழகை ரசித்தேன்
மெதுவாக கையால் தடவினேன்
பஞ்சுபோல் மெதுமையாக
சில்லிட்ட உரோமங்கள்
உந்திவிட்ட ஆவலில்
மேற்பாகம் தொட்டு மெதுவாக விலக்க
செக்கிச் சிவந்து
நெளிந்த உடற்பாகம்
மங்கிய அறை ஒளியில்
மின்மினியாய் ஒளிர்ந்தது
ஓவ்வொன்றாக விலக்கி
அழகின் புதிய பரிமாணத்தை
அங்குலம் அங்குலமாக
ரசித்தேன்
அழகிலே மயங்கி
மார்பில் சேர்த்தணைத்து மெதுவாக
என்னை முழுமையாக மறைத்தேன்
மார்கழிக் குளிரில் என்மேல் பரவி
சுகந்தத்தையும் இதமான சூட்டையும்
தந்தது எனது புதிய கம்பளிப்போர்வை

Thursday, October 8, 2009

முதல்...........!


பூவிதழால் வருடுவது போன்ற
மென்மை
சிலிர்த்தது போலிருந்தது!
உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை
உணர்ச்சி நரம்புகளில் மின்சாரம் ஊடுருவிச் சென்றதைப்போல
ஒரு வகை உணர்வுப்பிரவாகம்!
மகுடிக்கு மயங்கிய பாம்புபோல
உடலும் மனமும் கட்டுண்டு கிடக்க
புதுவகை உணர்வின் இன்பத்தேடலில்
விலக முயலாமல் உடல் தளர்வடைய
என்னை அறியாது
கண்களும் சொருக.....
தயவுசெய்து கேட்காதே
இப்போது நினைத்தாலும்
சிலிர்க்கின்றது – உடல்
படபடக்கின்றது - இதயம்
உணர்வுகள் உந்துகின்றன
ம் .... ம்
புரியவில்லை!
சொல்ல முடியவில்லை!
உன் முதல் முத்தம் எப்படியிருந்ததென்று!

Tuesday, October 6, 2009

நிஐங்கள்



காதலில்

செங்கதிர் பரப்பிவர
பனித்திரை விலகியது
பளிங்குச்சிலை போல் உருவம்
ஒய்யாரமாய் நடந்துவர...!
என சிந்தனையிலிருந்த அவளை
வடித்தேன் வரிகளில்
என்னைப்பார்த்த நண்பன்
நகைப்பாய் சிரித்தான்
காதலென்றால் புரியுமா? என்றேன்
அவனிடம்
நினைத்துப்பார்க்கவே நேரம் போதாதிருக்கும் இப்போது
நேரமிருந்தும் நினைக்கமாட்டாய்
மனைவியான பின்! என்றான்
சிரித்தபடி! என்னிடம்
நிஐங்கள் புரியவில்லை
காதலியின் கற்பனையில் நான்!


மறந்தவிடு - அவள்

துடிக்க மறந்த இதயம்
உணவை மறந்த வயிறு
ரசிக்க மறந்த மனம்
தூங்க மறந்த விழிகளில்
கண்ணீர்
ஏன்?
மறந்துவிடு என்றவள் சொன்னதால்!


மறந்துவிடு - அவளை

மறந்து விடு என்றார்கள்
மறப்பதற்கு முயல்கின்றேன்
மறந்து விட்டாயா? என
மாறி மாறி கேட்டு
மறக்க சொன்னால்
மறப்பது எப்படி! இலகுவில்
மறக்க கூடிய நினைவுகளா அவை!

Sunday, October 4, 2009

காதலும்.........புரிதலும் - எனது பார்வையில்


இளம்பிராயத்தினர்களுக்கு சுரக்கும் ஓமோன்களின் வெளிப்பாடுதான் காதல் என விஞ்ஞான ரீதியாகச் சொல்லப்படுகின்றது. என்றாலும் வாழ்வதற்காக தனக்கு வேண்டிய துணையை தெரிவு செய்வதற்கு காதல் முக்கிய ஊடகமாக இருக்கின்றது என்பது உண்மை.

புரிந்துணர்வின் அடிப்படையில் காதல் வருவதாயின் பெரும்பாலாக வயது, சமூக அறிவு, அனுபவ முதிர்ச்சியின் பின் உருவாவது சாத்தியப்படலாம், இது மிகக்குறைவு. ஆனால் ஓமோன்களின் செயற்பாட்டின் பக்கவிளைவு என்று கூறப்படும் காதல்கள் தான் நடைமுறையில் கூடுதலானவை. அநேகமாக பல காதல் வாழ்க்கைகளின் உருவாக்கப்புள்ளி இதுதான். இத்தளத்தில் அமையும் காதலும் வாழ்க்கையும் பொதுவாகப் புரிதலின் அடிபபடையின்மையால் சிக்கலான முடிவை நோக்கி செல்பவை, அல்லது தவிர்க்க முடியாமல் தொடரப்பட்டுக்கொண்டிருப்பவை.

காதல் வயப்பட்டகாலத்தில் மலையைக்கூடப் புரட்டிக்கொண்டு வந்து கொடுக்கலாம், உலகமே எதிர்த்தாலும் வென்று காட்டலாம், என்றெல்லாம் தோன்றும். மைய சிந்தனைப்புள்ளியாக காதலே பிரதானப்பட்டிருக்கும் போது ஆலோசனைகள் அலட்டல்களாக தெரியும். நண்பர்களிடம் பெருமையாக 'எங்களுக்கு எல்லாவிடயங்களிலும் அந்தமாதிரி ஒத்துப்போகுது' சொல்லமுடியும். இவ்வாறு பற்பல வியாக்கியானங்களை உதிர்க்க இயலும். (தற்போது நினைக்கும்போதுதான் எவ்வளவு முட்டாள்தனமாக இருந்திருக்கின்றேன் என தோன்றும்). உச்சமாக அவளுக்காக சாகலாம் என்றும் கூட தேன்றும். சிலர் காதல் தோல்வியால் தம் உடலைக் காயப்படுத்துவது, தற்கொலை செய்யமுனைவது உட்பட பல மோசமான செயற்பாடுகளிலும் இறங்குவார்கள்.

காதல் மயக்கத்தில் கதைக்கும் விடயங்கள், விருப்பு வெறுப்பு தொடர்பான கருத்தொற்றுமை, சொல்லப்படும் வாக்குறுதிகள், வாழ்தல் தொடர்பான கற்பனை விவாதங்கள், திட்டமிடல்கள் வாழ்க்கையிலும் தொடரும் என நினைக்கும் இருபாலாரும் அதைப் பலமாக நம்பி கற்பனையை வளர்த்துக் கொள்வார்கள். முக்கியமாக பெண்கள், எப்பவும் அன்பாக இருப்பீர்களா! இதேபோலவே கடைசிவரை கதைத்துக்கொண்டிருப்பீர்களா! என்னை வைத்து காப்பாற்றுவீர்களா! போன்ற கேள்விகளை எழுப்புவார்கள், ஏனெனில் தனித்துவமாகத் தீர்மானம் எடுக்கும் போது, பெற்றோரிடமிருந்து கிடைத்த பாதுகாப்பு உட்பட அனைத்து விடயங்களும் கிடைக்குமா? என்பதை உணர முற்படுவார்கள். பெண் அநேகமாக சார்ந்து வாழ்ந்து பழக்கப்பட்டவள் என்பதால் எதிர்காலம் தொடர்பான பயத்தில் இவற்றை உறுதிப்படுத்த முனைவாள். அநேகமான ஆண்கள் சாதகமான பதிலைத்தான் கூறமுடியும். இதற்கு கூறப்படும் பதில்கள் பெரும்பான்மையாக நிஐமல்ல.

அன்பின் புரிதல் காதல்
காதலில் புரிதல் மயக்கம்
வாழ்க்கையில் புரிதல் தெளிவு
புரிதலின் தெளிவு நிறைவான காதலாகும்
வாழ்க்கையின் புரிதலில் ஆதிக்கம் செலுத்துவது நிஐ உணர்வுகள்

காதலின் போது அன்பும் காமமும் நிரம்பியிருக்கும் அக்காலத்தில் வாழ்க்கையை புரிந்து விட்டோம் வாழ்க்கையை வெல்வோம் என நம்புவதும் வாழ்க்கையின் புரிதலல்ல. வாழ்க்கையில் புரிதல் என்பது கருத்து ஒற்றுமை, பழக்கவழக்கம், விட்டுக்கொடுத்தல், விருப்புவெறுப்பு போன்ற பல அடிப்படை அம்சங்களின் உடன்பாட்டின் அடிப்படையில் உருவாகும் நேசம். அதுவே நிஐமாகும். குறிப்பாக இரண்டு வேறுபட்ட சிந்தனை, கருத்து, பழக்கவழக்கமுள்ள குடும்ப பின்தளங்களிலிருந்து இணையும் போது, வாழ்கைத் தீர்மானத்தில் அப்பதிவுகளும் ஆதிக்கம் செலுத்தும். இவைகளிலிருந்து விடுபட்டுத் தங்களுக்குள் ஒரு தெளிவு பெறுதலே முழுமையான புரிதல் ஆகும். காதலில் புரிதல் என்பது முழு வாழ்க்கைக்கும் பொருந்துமென்று நினைப்பது பொருத்தமானதல்ல. வாழ்க்கையில் புரிதலே நிறைவான வாழ்க்கையின், காதலின் வெளிப்பாடு.

எனவே காதலின் புரிதல் என்பது வாழ்க்கையின் புரிதலிலேயே முழுமை பெறும். இதுவே நிலையான காதலுக்கும், சந்தோஷமான வாழ்க்கைக்குமான அடிப்படையாக அமைகின்றது.