Thursday, October 15, 2009

ஏக்கம் !!!

நான் எழுதும் தொடர் கவிதைகளை
கேட்டுப்பார்
எம் காதலின் ஆழத்தை எடுத்துரைக்கும் !!!
கடற்கரை மணலில் நாம் இருந்த இடங்களை
கேட்டுப்பார்
எம் எதிர்கால வாழ்க்கை பற்றிய கதைகளை
கூறி சிரிக்கும் !!!
ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளை
கேட்டுப்பார்
அழகான உன் பாதங்களை தொட துரத்தி
களைத்து ஓய்ந்ததை கதைகதையாய்
சொல்லும் !!!
முழுநிலவைக் கேட்டுப்பார்
எம் சத்தமில்லா கூடல்களை பார்த்து வெட்கித்து,
முகில் கூட்டங்களை துணைக்கு அழைத்ததை
சொல்லும் !!!
என் கண்களைக் கேட்டுப்பார்
உன் கனவுகளிலிருந்து விடுபட விரும்பாமல்
திறக்க மறுத்ததை சொல்லும் !!!
பார்க்குமிடமெல்லாம் உன் நினைவுளை
பதித்து சென்றவளே !!!
நீயில்லாத பொழுதுகளில்
உன்னைத்தவிர எல்லாவற்றையும்
மறந்து போகின்றேன்
இதைத்தான் சொன்னாயா
நீ என்னருகில்
இல்லாவிட்டாலும்
என்னுடன் முழுமையாக
இருப்பாயென்று !!!

2 comments:

முல்லைப்பிளவான் said...

good keep it up

Manithan said...

தலைமகனை இழந்த தாயின் கதறல்.

கருவில் கண்ட கனவு
களைந்து போனதையா...
உன் உருவில் கண்ட நினைவு
கலங்கிப் போனதையா....!

பத்து மாதம் உன்னைப்...
பெற்றெடுக்கப் பட்ட துன்பம்
உன்னைக் கண்டவுடன்...
என்னை விட்டுப் போனதையா....!

தலைமகனாய்த் தரணியிலே
தடம் பதித்திட்ட நாயகனே...
தாங்கவில்லையடா - இந்த
பூமி உந்தன் வருகைதனை....!

எட்டி நடை போடும் அன்னமாய்...
எம்மைச் சுற்றிச் சுற்றி
வலம் வந்த கண்ணழகா...!
யார் கண் பட்டதோ
உன் விழி மூட....!

பிறர் பிள்ளை தலை தடவி
பெருமைப் பட்டேனையா...
என் பிள்ளை தானாய் வளருமென
கனவு கண்டேனையா....!

பாலுட்டும் போது பாசத்தை
மட்டும் தான் ஊட்டினேனையா...
நீ... போகப் போவது தெரிந்திருந்தால்
வீரத்தையும் சேர்த்து ஊட்டியிருப்பேனையா....!

உன் வரவு காணாமல் வாசலிலே
உன் உறவுகள் துடிக்குதையா...
ஒரு இரவு வந்தாலே
உன் வீடு சுடுகாடாய் மாறுதையா....!

காலை என்னைக் கட்டியணைத்து
பிறந்த நாள் முத்தம் தந்தாயையா...
மாலை என்னைக் கதறவைத்து
உன்னுயிரையே பரிசாய் தந்தாயையா....!

பாத்துப் பார்த்து உனைப்
பத்திரமாய் வளர்த்தேனையா...
பார்த்த விழி பூத்திருக்கப்
பாவிகள் உனக்கு
பாடை கட்டி விட்டார்களையா....!

அனுக்குட்டி என்று
ஆயிரம் தடவை அழைப்பேனையா...
இந்த அம்மாவை விட்டு விட்டு
எங்கே குட்டி போனாயையா.....!

உன்னுடன் பிறப்புக்கள் அழும்குரல்
உனக்குக் கேட்கவில்லையாயையா...
உன் தம்பிமார் படும் வேதனையை
என்னால் பார்க்க முடியவில்லையையா....!

உன் தந்தை உன்னில்
உயிராய் இருந்தாரையா...
உன்னுயிர் போனபின்
உள்ளம் உடைந்து போனாரையா....!

உன்னுயிருக்குப் பதிலாய்
என்னுயிர் போயிருக்கலாமேயையா...
நீ இல்லா இவ்வுலகில்
என்னுடலும் பிணமாய் மாறிவிட்டதையா....!

உன் ஆத்மா சாந்தியடைய
தினமும் பிராத்திப்போமையா...
உன் நினைவுகள் என்றும்
எம் உயிரில் உறைந்திருக்குமையா....!

உங்கள் அபிசேகா.